5 ஜி இணைய சேவை எப்படி இருக்கும்?.. பிரதமர் மோடிக்கு நேரில் டெமோ காட்டிய ஆகாஷ் அம்பானி!
டெல்லி: 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். பின்னர் 5 ஜி இணைய சேவை ஸ்பீடு எப்படி இருக்கும் என்பதை பிரதமர் மோடிக்கு ஆகாஷ் அம்பானி நேரில் டெமோ காட்டினார்.
இன்றைய நவீன உலகில் இணையத்தின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
அந்த அளவுக்கு இணையம் நமது பழக்கவழக்கங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி விட்டது.
5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. 13 நகரங்களில் சூப்பர்ஃபாஸ்ட் நெட்.. எங்கெல்லாம் தெரியுமா?
5 ஜி சேவை
தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அதிவேக இணையவேகம், எவ்வளவு பெரிய ஃபைல்கள் என்றாலும் நொடிப்பொழுதில் தரவிறக்கும் வசதி, சூப்பர் பாஸ்ட் கேமிங் வசதி என ஏராளமான வசதிகளை கொண்ட 5 ஜி சேவை இணைய உலகில் மற்றொரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள்..
டெல்லியில் நடைபெற்ற 6-வது மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஜியை சேவையை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக மெட்ரோ நகரங்களில் இந்த சேவை கிடைக்கும் என்றும் அடுத்த ஆண்டு (2023) ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் 5 ஜி சேவை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 5 ஜி சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதன் பிறகு, அங்கு மொபைல் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளுக்கு சென்று பார்வையிட்டார்.
பிரதமர் மோடிக்கு டெமோ
முதலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கிற்கு சென்ற பிரதமர் மோடி, 5 ஜி தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார். ஜியோ அரங்கில் அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். தொடர்ந்து 5 ஜி இணைய சேவையின் வேகம் மற்றும் அதன் அனுபவங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பிரதமர் மோடிக்கு டெமோ காட்டி விளக்கினர்.
மோடிக்கு விளக்கி காட்டினர்
இதை பிரதமர் மோடி கவனமுடன் கேட்டார். அப்போது ஜியோ கிளாஸ் அணிந்து அது செயல்படும் விதத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அதேபோல் நகர்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் சுகாதாரத்துறையில் இருக்கும் இடைவெளியை போக்க 5 ஜி சேவை எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பதையும் ஜியோ நிறுவனத்தின் இளம் என்ஜினீயர்கள் குழு பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்தது.
மற்ற அரங்குகளையும் பார்வையிட்டார்
அப்போது பிரதமர் மோடியுடன் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மற்றும் தேவுஷின் சவுகான் ஆகியோரும் உடன் இருந்தனர். அதேபோல், ஏர்டெல், வோடோன் ஐடியா, சி- DOT உள்பட 5 ஜி இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் அமைத்து இருந்த அரங்குகளுக்கும் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களும் பிரதமர் மோடிக்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஏழை மக்கள் கூட
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி என்பது சாதனத்தின் விலை, டிஜிட்டல் இணைப்பு, தரவு செலவுகள் மற்றும் டிஜிட்டல் முதல் அணுகுமுறை ஆகிய 4 தூண்களை அடிப்படையாக கொண்டது. 5ஜி அலைக்கற்றையை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தது 130 கோடி இந்தியர்களுக்கு தொலைத்தொடர்பு துறை அளித்த பரிசாகும். இது புதிய சகாப்தத்தின் அடுத்த படிதான் என்று சொல்ல வேண்டும். இந்தியாவில் தற்போது ஏழை மக்கள் கூட புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி வருகின்றனர்' என்றார்.