'75 ஆண்டுகளில்.. நாம் செய்த மாபெரும் சாதனை இது தான்..' சவுமியா சுவாமிநாதன் எதை சொல்கிறார் தெரியுமா
டெல்லி: இந்தியா பார்மா துறையில் முக்கியமானதாக மாறி உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உள்ளது என்றும் நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த மாபெரும் சாதனை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைவரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் போராட்டத்தையே நடத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதே இந்த வைரஸை கட்டுப்படுத்துவதை பெரும் பணியாக மாற்றியுள்ளது. ஆல்பா தொடங்கி, பீட்டா, காமா, டெல்டா என இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.

மாபெரும் சாதனை
அதற்கேற்றவாறு உலக சுகாதார அமைப்பும் தனது பரிந்துரைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், "பொலியோ தொடங்கி தடுப்பூசியால் கட்டுப்படுத்தக் கூடிய பல்வேறு நோய்களை நாம் ஒழித்துள்ளோம். பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகளும், குழந்தை உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளதே இதற்கு முக்கிய காரணம். இந்தியா பார்மா துறையில் முக்கியமானதாக மாறி, உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உள்ளது, நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த மாபெரும் சாதனைகளில் இதுவும் ஒன்று.

என்ன திட்டம்
அதேநேரம் கொரோனா பரவல் இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் சுகாதார சேவைகள் கிடைப்பதைப் பாதித்துள்ளது. இந்தியாவில் காசநோய் மற்றும் பிற நோய்கள் மற்றும் குழந்தை நல சேவைகளை வழங்குவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் எங்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல வரும் காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டாலும் பிற வேக்சின் மற்றும் மருந்து சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு
இந்த கொரோனா பெருந்தொற்று சர்வதேச அளவில் வறுமையை அதிகரித்துள்ளது. மேலும் சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே நாம் உண்மையில் தரவுகளைக் கவனமாகப் பார்க்க வேண்டும். வறுமையின் விகிதத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகக் காசநோய் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே இதில் நாம் முறையாகக் கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

யுனிசெஃப் கருத்து
யுனிசெஃப் கருத்துப்படி, இந்தியாவில் ஏற்படும் நோய் பரவலுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று இதுதான். கொரோனா தொற்று ஊட்டச்சத்துக் குறைபாடு நிலையை மோசமாக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாகக் குழந்தைகள் நேரடியாகப் பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் கூட இது போல மறைமுகமான பாதிப்பு மிக மிக அதிகம் என்பதே வல்லுநர்களின் கருத்து. முன்னதாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டு இருந்தது. ஆனால், ஆன்லைன் கல்வி என்பது மாணவர்களை மன ரீதியாகப் பாதிக்கும் என்பதால், பாதுகாப்பான சூழல் உருவான பிறகு முடிந்த வரை விரைவாகப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications