ரூ.1 கோடி 'விலை'யுடன் தேடுதல்..சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் கமாண்டர் சலபதி யார்?
டெல்லி: சத்தீஸ்கர்- ஒடிஷா மாநில எல்லையில் பாதுகாப்புப் படையினரால் 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டரான சலபதியும் ஒருவர். இவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பாதுகாப்புப் படையினர் அறிவித்த நிலையில் சலபதி உட்பட 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜெயராம் ரெட்டி என்ற சலபதி, ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் நக்சலைட்டுகள் எனப்படும் மாவோயிஸ்டுகள். இந்தியாவின் பல மாநிலங்களில் வனப்பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் மாவோயிஸ்டுகள் ஒருகாலத்தில் வைத்திருந்தனர். ஆனால் தற்போது மாவோயிஸ்டுகள் பெருமளவில் ஒடுக்கப்பட்டுவிட்டனர்.

சத்தீஸ்கர், ஒடிஷா, மகாராஷ்டிரா எல்லைகளில்தான் கணிசமான எண்ணிக்கையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அண்மைக்காலமாக மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கை முழு வீச்சில் நடைபெறுவதால் கொத்து கொத்தாக மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த கமாண்டர் சலபதி
இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஒடிஷா- சத்தீஸ்கர் எல்லையில் மேற்கொள்ளப்பட்டது. ஒடிஷா மாநிலத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளை இரு மாநில பாதுகாப்புப் படையினரும் இணைந்து வேட்டையாடினர். இதில் 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் ஜெயராம் ரெட்டி என்ற சலபதி, மிக முக்கியமான மாவோயிஸ்டுகளின் கமாண்டராவார். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சலபதி. ராமச்சந்திர ரெட்டி, அப்பாராவ், ராமு என பல பெயர்களில் அழைக்கப்பட்டவர் சலபதி.
யார் இந்த கமாண்டர் சலபதி?
தற்போது 60 வயதை கடந்த சலபதி, ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு வரை படித்தவரான சலபதி, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து படிப்படியாக மத்திய குழு உறுப்பினரானார். மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளை இறுதி செய்யக் கூடியதுதான் மத்திய குழு. இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் ரூ1 கோடி பரிசு வழங்கப்படும் என ஏற்கனவே பாதுகாப்புப் படை அறிவித்திருந்தது. அந்த அளவுக்கு மாவோயிஸ்டுகளின் மிக மூத்த கமாண்டராக செயல்பட்டவர்தான் சலபதி.
கமாண்டர் சலபதியை சுட்டுக் கொன்றது எப்படி?
சத்தீஸ்கரின் பஸ்தார் அடர்வனப்பகுதியை விட்டு எப்போதும் வெளியே வராத சலபதிக்கு 10 மாவோயிஸ்டுகள் பாதுகாவலர்களாக வலம் வந்தனர். சலபதிக்காக ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அண்மையில்தான் பஸ்தான் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஒடிஷா எல்லை அருகே உள்ள கரியாபந்த் பகுதிக்கு இடம் பெயர்ந்தார் சலபதி. பெரும் எண்ணிக்கையில் மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் நடமாடும் தகவல் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த நிலையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையில்தான் சலபதி உட்பட 20 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளின் மிக முக்கியமான தளபதியான சலபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்திருப்பது, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் மிகப் பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது என்கின்றன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications