சீனாவில் மீண்டும் அரங்கேறும் "அந்த சம்பவம்.." பல உருமாறிய கொரோனா வகைகள் தோன்றும்! அலறும் ஆய்வாளர்கள்
டெல்லி: சீனாவில் இப்போது கொரோனா பரவல் கையை மீறிச் சென்றுள்ள நிலையில், இது உலகெங்கும் அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படும் நிலையில், இது தொடர்பாக வல்லுநர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனா, இத்தனை காலம் ஜீரோ கோவிட் கொள்கையைப் பின்பற்றி வந்தது. உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் என்ற முடிவை எடுத்த நிலையில், சீனா மட்டும் விடாப்பிடியாக ஜீரோ கோவிட் பாலிசியை பின்பற்றியது.
ஊரடங்கு, தனிமை ஆகியவற்றுக்கு மக்கள் எதிர்ப்பு அதிகரிக்கவே சீனா முழுக்க போராட்டங்கள் வெடித்தன. இதனால் அந்நாட்டு அரசு வேறு வழியில்லாமல் ஜீரோ கோவிட் பாலிசியை திரும்பப் பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சீனா
சீனாவில் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் செலுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும், அங்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சினோவார்க் மற்றும் சினோபார்ம் வேக்சின் தான் செலுத்தப்பட்டது. இதன் தடுப்பாற்றல் ரொம்பவே குறைவாக உள்ளது. இதுவே வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவ காரணமாக அமைந்தது. மேலும், அங்கு முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் பெரியளவில் போடாததால், அவர்களின் தடுப்பாற்றல் ரொம்பவே மோசமான நிலையில் இருந்தது. இதுவே அங்கு கொரோனா பாதிப்பு இந்தளவுக்கு வேகமாகப் பரவ காரணமாக அமைந்துள்ளது.

பல லட்சம் பேருக்குப் பாதிப்பு
இது சீனா மட்டுமின்றி உலகளவில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், கொரோனா பரவ பரவ தான், அது உருமாற்றம் அடையும். கொரோனா மட்டுமின்றி அனைத்து வைரஸ்களும் இப்படித்தான் தொடர்ந்து உருமாற்றமடையும். கடந்த காலங்களில் மோசமான அலைகளை ஏற்படுத்திய உருமாறிய கொரோனா வகைகளும் இப்படித்தான் ஏற்பட்டது. இப்போது சீனாவில் ஒரே நாளில் பல லட்சம் பேருக்கு கொரோனா பரவி வரும் நிலையில், எங்கு இது புதிய உருமாறிய கொரோனா வகைகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

உருமாறிய கொரோனா
இது தொடர்பாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தொற்று நோய் வல்லுநர் டாக்டர். ஸ்டூவர்ட் காம்ப்பெல் கூறுகையில், "சீனாவில் மக்கள்தொகை மிகப் பெரியது. அங்கு மக்களிடையே மிகக் குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இது புதிய வகை கொரோனாவை உருவாக்கும் அனைத்து சூழல்களையும் உருவாக்குகிறது. பொதுவாகவே மிகப் பெரியளவில் கொரோனா பாதிப்பு இருந்தால், புதிய கொரோனா வகைகளும் உருவாக வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். அங்கு மக்களுக்கு ஓரளவுக்கு தடுப்பாற்றல் இருக்கிறது. இதனால் வைரஸ் மக்களிடையே வேகமாகப் பரவ தன்னை தானே உருமாற்றிக் கொள்ளும்.

கற்றுக்கொள்ளும்
இந்த வைரஸை நாம் ஒரு குத்துச்சண்டை வீரருடன் ஒப்பிடலாம். மனிதர்களிடம் இருக்கும் தடுப்பாற்றலை புரிந்து கொள்ளும் அது. அதில் இருந்து தப்பும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும். அதேநேரம் புதிதாக ஏற்படும் கொரோனா வகைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என உறுதியாகச் சொல்ல முடியாது. வைரஸ் பாதிப்பு காலப்போக்கில் பலவீனமான மாறும் என உறுதியாகச் சொல்ல முடியாது. இத்தனை காலம் நமக்கு இருக்கும் தடுப்பாற்றலே நம்மைக் காப்பாற்றி வந்துள்ளது. இதை வைத்து வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை இழந்துவிட்டது எனச் சொல்ல முடியாது" என்றார்.

வேக்சின்
நாம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆர்என்ஏ வேக்சினை பயன்படுத்தினோம். இது அதிகபட்ச தடுப்பாற்றலை மனிதர்களுக்குத் தருகிறது. ஆனால், சீன வேக்சின் பழைய தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை. இவை போதிய தடுப்பாற்றலை தருவதில்லை. கடந்த காலங்களில் சீனாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், வைரஸ் பாதிப்பு உலகெங்கும் பரவியது இந்த முறையும் அதே பாதிப்பு ஏற்படுமா அல்லது பாதிப்புகள் மாறுமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும் என்கிறார் ஆய்வாளர் டாக்டர் ககன்தீப் காங்.

உலக சுகாதார அமைப்பு
சீனாவில் கடுமையான நோய் பரவும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது. அங்குத் தலைநகர் பெய்ஜிங் தொடங்கி கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குப் பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. போதிய படுக்கைகள் கூட இல்லாத சூழலே ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications