வொர்க் பிரம் ஹோம்ல இப்டி ஒரு வசதியா.. அட கடவுளே அதனால் தான் எல்லோரும் ரொம்ப ஜாலியா இருக்காய்ங்களா!
பேண்ட் அணியாமல் இருப்பதற்காகவே பலரும் வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புவதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.
டெல்லி: கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் சூழலில் பெரும்பாலான தொழிலாளர்கள் அலுவலகம் செல்ல மறுப்பது ஏன் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2020 மார்ச் 24ம் தேதி.. வலசை சென்ற பறவைகள் எல்லாம் மாலையில் கூடடைவது போல் இந்தியர்கள் எல்லாம் வீடுகளுக்குள் தங்களை பூட்டிக்கொண்ட நாள். ஓராண்டு கடந்துவிட்ட சூழலிலும் பறவைகள் மீண்டும் வலசைக்கு புறப்படவில்லை. காரணம் ரொம்ப சிம்பிள்.. மீண்டும் வெளியில் போக வேண்டுமானால் மறுபடியும் பேண்ட் போடணுமே?
என்னங்க ஒண்ணும் புரியலையா.. போன வருஷம் இந்நேரம் எல்லாம் ஒட்டுமொத்த உலகமும் ஒர்க்பிரம்ஹோம் கான்செப்டுக்கு வந்துடுச்சு. ஐடி கம்பெனிகள் மட்டுமல்லாமல் பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிச்சாங்க. அதற்கு தேவையான வசதிகளையும் செஞ்சாங்க.
திரும்பவும் ஆபிசா?
அவசர அவசரமாக கிளம்பி, டிராபிக்கில் வேலைக்கு ஓடி, களைத்து வீடு திரும்பியவர்களுக்கு, இந்த வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது ரொம்பவே பிடித்தமானதாகி விட்டது. அதனால் தான், படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைய மீண்டும் அலுவலகத்துக்கு சென்று வேலை செய்ய வேண்டும் எனும் சூழல் தொழிலாளர்களுக்கு வந்தபோது கொஞ்சம் முகம் சுளித்தார்கள்.
கொரோனா இரண்டாம் அலை
ஓராண்டாக வீட்டிலேயே வேலை செய்து பழகிவிட்டவர்களால் மீண்டும் அலுவலகத்துக்கு சென்று, மீண்டும் இயந்திரத்தனமாக வேலை பார்க்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்கு வசதியாக கொரோனா 2வது அலை ஆரம்பிக்க மீண்டும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறார்கள் தொழிலாளர்கள். இந்த சூழலில் தொழிலாளர்கள் மீண்டும் அலுவலகம் சென்று பணியாற்ற விரும்பாதது எதனால் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஜாலி சர்வே ஒன்று வெளியாகியுள்ளது.
பேண்ட் பிரச்சினை
அதில் மொத்தம் ஐந்து காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது, 1.போக்குவரத்து நெரிசல், 2.குடும்பத்துடன் இருப்பது பிடித்திருக்கிறது, 3.வீட்டில் இருந்தால் இன்னும் சிறப்பாக பணியாற்றுகிறேன், 4.சகபணியாளர்களை நேரில் பார்க்காமல் இருப்பது நிம்மதியாக உள்ளது, 5. பேண்ட் அணிய வேண்டிய அவசியமில்லை.
அமோக ஆதரவு
இதில் ஒரு சிலர் மட்டுமே முதல் 4 காரணங்களை டிக் செய்துள்ளனர். சுமார் 80 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது பேண்ட் அணிய வேண்டியது இல்லை என்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். இந்த சர்வே உண்மையாகவே எடுக்கப்பட்டதா? அல்ல நெட்டிசன்களின் சித்து வேலையா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த சர்வே புகைப்படத்தை பலரும் ஆமோதித்து கமெண்ட் செய்துள்ளனர் என்பது தான் ஹைலைட்.
Recommended Video
வைரல்
பெண்களுக்கு நைட்டி மாதிரி, ஆண்களுக்கு சௌகரியமான உடையாக கைலியும், சார்ட்ஸ் எனச் சொல்லப்படும் டவுசரும் உள்ளன. போன வருடத்தை மாதிரியே இந்த வருடமும் ஊரடங்கால் அதிகம் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இது போன்ற இரவு நேர உடைகளே பகல் நேர உடைகளாகவும் மாறி விட்டன. ஏற்கனவே இது பற்றிய பல மீம்ஸ்கள் இணையத்தில் உலா வரும் வேளையில் இந்த சர்வே புகைப்படமும் அதில் புதிய வரவாகி இருக்கிறது.