நிறம் மாறும் பாட்டில்.. ஸ்ப்ரைட் குளிர்பான நிறுவனத்தின் முக்கிய முடிவு.. பின்னணியில் சூப்பர் காரணம்!
டெல்லி: கோககோலா நிறுவனத்தின் ஸ்ப்ரைட் குளிர்பானம் பச்சை நிற பாட்டிலில் விற்பனை செய்யப்படுவதற்கு பதில் நாளை முதல் வெள்ளை நிற பாட்டிலில் விற்பனை செய்யப்பட உள்ளது. 60 ஆண்டுகால நிற மாற்றத்துக்கு பின்னணியில் அசரவைக்கும் காரணம் ஒன்று உள்ளது.
இந்தியாவில் உள்ள ஸ்ப்ரைட் குளிர்பானம் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த குளிர்பானத்தை கோககோலா நிறுவனம் தான் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஸ்ப்ரைட் குளிர்பானத்தை பொறுத்தமட்டில் அது பச்சை நிற பாட்டிலில் அடைக்கப்பட்டு இருக்கும். தற்போது ஸ்ப்ரைட் குளிர்பான பாட்டிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
60 ஆண்டுக்கு பின் மாற்றம்
அதாவது கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த பச்சைநிற பாட்டில் மாற்றப்பட்டுள்ளது. இனி ஸ்ப்ரைட் குளிர்பானம் வெள்ளை நிற பாட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட உள்ளது. இருப்பினும் ஸ்ப்ரைட் குளிர்பானத்தின் அடையாளமான பச்சை நிறம் புதிய பாட்டிலிலும் இருக்கும். அதாவது பாட்டிலில் உள்ள லேபல் மற்றும் மூடி பச்சை நிறமாக இருக்கும்.
நாளை முதல் மாற்றம்
இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1ம் தேதியான நாளை முதல் அமலுக்கு வர உள்ளது என ஸ்ப்ரைட் தயாரிப்பு நிறுவனமான கோககோலா அறிவித்துள்ளது. மேலும் 60 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட பச்சை நிற பாட்டில் திடீரென்று மாற்றம் செய்யப்படுவது ஏன்? என்பதற்கும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காரணம் என்ன?
அதாவது பச்சை நிறத்திலான பாட்டில் தயாரிக்க பாலி எத்திலின் டெட்ராப்தாலேட் (polyethylene tetraphthalate) என்பது பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் பாட்டிலை மறுசுழற்சி செய்ய முடியாது. மாறாக தரைவிரிப்பு உள்ளிட்டவைகளாக மட்டுமே மாற்ற முடியும். ஆனால் கோககோலா நிறுவனம் பாட்டில் மறுசுழற்சி செய்ய விரும்புகிறது. இதனால் மறுசுழற்சி செய்யும் வகையில் வெள்ளை நிற பாட்டில் ஸ்ப்ரைட் குளிர்பானத்தை விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மறுசுழற்சிக்கான ஒப்பந்தம்
மேலும் இந்த திடீர் மாற்றத்துக்காக ஸ்ப்ரைட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து திரும்ப திரும்ப பயன்படுத்துவதற்காக ஆர்3சைக்கிள் என்ற நிறுவனத்துடன் ஒப்பபந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியன் ஓச்சோவா கூறுகையில், "மறுசுழற்சி செய்யும் போது வெள்ளை நிறத்தில் தெளிவான ஸ்ப்ரைட் பாட்டில்களை பெற முடியும். இது பிளாஸ்டிக் குப்பை சேருவதை தடுப்பதோடு, பிளாஸ்டிக்கின் மறுசுழற்சி பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும்'' என்றார்.