"நானோ" ஞாபகம் இருக்கா! மீண்டும் அதேபோல.. இவ்வளவு குறைந்த விலையா! புயலை கிளப்பிய டாடா.. பெரிய ரிஸ்க்
டெல்லி: மின்சார கார் சந்தையில் இப்போது புயல் அடிக்க தொடங்கி உள்ளது. இது அத்தனையும் தொடங்கி வைத்தது டாடா நிறுவனம் தான்.
பெட்ரோல், டீசல் விற்கும் விலை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதிலும் உக்ரைன் போர் போன்ற நிகழ்வுகள் பெட்ரோல், டீசல் விலையை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.
இது லாரி, பேருந்துகள் போன்ற வணிக ரீதியான வாகனங்களைத் தாண்டி நடுத்தர வர்க்கத்தினரையும் கூட பாதிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால், இந்த நிலை விரைவில் மாற உள்ளது.

மின்சார கார்கள்
பெட்ரோல், டீசல் விலை என்பது சர்வதேச சந்தையைப் பொறுத்து இருக்கும் என்பதால் அதைப் பெரியளவில் கட்டுப்படுத்த முடியாது. இப்போது இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக ஓரளவு ஏற்ற விலையில் மின்சார வாகனங்கள் வந்துவிட்டன. ஆனால், கார்களில் இதுவரை அப்படி எதுவும் நடக்காமலேயே இருந்தது. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுடன் ஒப்பிடும்போது, இதுவரை வெளியான மின்சார கார்களின் விலை என்பது சுமார் 50% வரை அதிகமாக இருந்தது.

டாடா
அந்தளவுக்கு அதிக விலைக்குக் கொடுப்பதற்குப் பலரும் தாயாராக இல்லை. டெஸ்லா காரை வாங்கவே வரிகளை எல்லாம் சேர்த்தால் கோடிக் கணக்கில் செலவாகும். இதனால் கார் சந்தையில் மின்சார வாகனங்கள் என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தச் சூழலில் டாடா நிறுவனம் புதிதாக டியாகோ காரின் மின்சார வேரியண்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

கம்மி விலை
இதன் ஆரம்ப விலை ரூ. 8.49 லட்சமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்டின் விலை இப்போது சுமார் ரூ 5.5 லட்சமாக உள்ளது. அதாவது பெட்ரோல் வேரியண்டின்டை விட மின்சார வேரியண்டின் விலை 25-30% தான் அதிகமாகும். முதலில் புக் செய்யும் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இது விலை என்றாலும் கூட இது பெரிய விஷயம் தான். இதில் ஒரே சார்ஜில் 250 கிமீ வரை செல்ல முடியும் என்று டாடா நிறுவனம் கூறுகிறது.

ஆதிக்கம் செலுத்தும் டாடா
பெட்ரோல், டீசல் கார் மார்க்கெட்டில் மாருதி நிறுவனத்திடம் விட்ட இடத்தை மின்சார கார் மார்க்கெட்டில் பிடித்தே தீர வேண்டும் என்பதில் டாடா உறுதியாக உள்ளது. இதனால் தான் மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாக மின்சார கார் சந்தையில் டாடா ஆர்வம் செலுத்தத் தொடங்கிவிட்டது. நெக்ஸான், டைகர் உள்ளிட்ட மாடல்கள் மூலம் நாட்டில் விற்பனையாகும் மின்சார கார் சந்தையில் டாடா ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இப்போது மின்சார கார் சந்தையில் 80% டாடாவிடம் தான் உள்ளது.

மற்றொரு நானோ
பொதுமக்களை இன்னும் வேகமாக மின்சார கார்களை வாங்க வைக்கவே இப்போது இவ்வளவு குறைந்த விலையில் டியாகோ காரை டாடா கொண்டு வந்துள்ளது. இது மின்சார கார் சந்தையில் டாடா எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதையே காட்டுகிறது. அதேநேரம் எங்கு டியாகோ கார் மற்றொரு நானோவாக முடிந்துவிடுமோ என்றும் கூட சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நானோ ஞாபகம் இருக்கா
நானோ என்பது ரத்தன் டாடாவின் கனவுத் திட்டமாகும். வெறும் ஒரு லட்சம் ரூபாயில் அவர்கள் நானோ காரை கொண்டு வந்தார்கள். இருப்பினும், அது டாடாவுக்கு மிக பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது. திரும்பிய பக்கம் எல்லாம் நானோ பற்றி நெகடிவ் பேச்சே இருந்தது. மேற்கு வங்கத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்கச் சென்றதில் இருந்து அதில் எல்லாமே சிக்கலாகவே இருந்தது. இதனால் நானோ டாடாவுக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது. இப்போது டியாகோவும் இவ்வளவு குறைந்த விலையில் வெளியிடுவது எங்கு மீண்டும் சிக்கலைத் தருமோ என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.

தவறுகள் இருக்காது
ஆனால், கடந்த முறை செய்த தவறுகளை இந்த முறை செய்யக் கூடாது என்பதில் டாடா தெளிவாக உள்ளது. இதன் காரணமாகவே நானோவுக்கு செய்தது போல இல்லாமல் டியாகோ கார் முழுமையாக ரெடி ஆன பின்னர் விலையை அவர்கள் அறிவித்து உள்ளனர். புக்கிங் இப்போது தொடங்கி உள்ள நிலையில், ஜனவரி மாதம் முதலே டியோகா மின்சார கார்கள் நமது சாலைகளை அலங்கரிக்க உள்ளது.

விலை குறையும்
இந்த விலையில் மின்சார காரை லான்ச் செய்து உள்ளது என்பது டாடாவுக்கு மட்டும் சந்தையை விரிவுபடுத்த உதவாது. மக்கள் டாடா மின்சார வாகனம் பக்கம் வர வர மற்ற நிறுவனங்களும் கிட்டதட்ட இதே விலையில் புதிய வாகனங்களை வெளியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். இது சந்தையில் மின்சார கார்கள் விலை குறைய வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications