"குழந்தைகளை வளர்க்க இந்தியா தான் பெஸ்ட்.." காரணங்களை பட்டியலிடும் அமெரிக்க பெண்! டிரெண்டிங்
டெல்லி: கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண் ஒருவர் தனது குழந்தைகளை இந்தியாவிலேயே வளர்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் குழந்தைகளை வளர்க்கும்போது பல்வேறு நன்மைகள் அவர்களுக்குக் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக விரிவான கருத்துகளைக் கூறியுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியர்கள் எப்படி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிற்கு செல்கிறார்களோ.. அதேபோல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியா வருகிறார்கள். அப்படி வருபவர்களில் சிலருக்கு இந்தியா ரொம்பவே பிடித்துப் போக அவர்கள் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறார்கள்.

குழந்தைகளை வளர்க்கச் சிறந்த நாடு
அப்படி தான் கடந்த 4 வருடத்திற்கு முன்பு இந்தியா வந்த அமெரிக்கப் பெண் ஒருவர், நம்ம ஊர் பிடித்துப் போகவே இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இதற்கிடையே அவர் இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தைகளை அமெரிக்காவில் வளர்ப்பதை விட இந்தியாவில் வளர்க்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தைகளை வளர்க்க இந்தியா சிறந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்மைகள்
மூன்று குழந்தைகளுக்குத் தாயான கிறிஸ்டன் பிஷ்ஷர், இது தொடர்பாக வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவரது குழந்தை இந்தியாவில் உள்ள ஒரு தெருவில் நடந்து செல்வது போல இருக்கிறது. அந்த வீடியோவில் தான் அவர், "எனது குழந்தைகள் இந்தியாவில் வளர்வதன் மூலம் பயனடைவார்கள். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை அமெரிக்காவிற்குப் பதிலாக இந்தியாவில் கழிப்பதால் ஏற்படும் நன்மைகள்" என்று பதிவிட்டு சில காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
கலாச்சார விழிப்புணர்வு மற்றும் தகவமைத்துக் கொள்ளும்: இந்தியாவில் வளரும்போது எனது குழந்தைகளுக்கு பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்கள் குறித்த ஆழமான புரிதலை வழங்கும். இதன் மூலம் புதிய விஷயங்களை அவர்கள் திறந்த மனதோடு அணுகுவார்கள். மேலும், தகவமைத்துக் கொள்ளும் திறனும் அவர்களுக்கு அதிகரிக்கும்.
பல மொழிகள்
பலமொழிகள்: இந்தியா என்பது பல வகையான மொழிகளின் தாயகம் ஆகும். இதனால் எனது குழந்தைகள் இந்தியைக் கற்றுக் கொள்வார்கள். மேலும் ஆங்கிலத்துடன் வேறு பல மொழிகளையும் அறிந்துகொள்வார்கள். இதுபோல பல்வேறு மொழிகளைப் பேசும்போது தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. எதிர்கால வேலை வாய்ப்புகள் மேம்படுத்துகிறது.
உலகளாவிய பார்வை: இந்தியாவில் வளரும்போது, எனது குழந்தைகளுக்கு உலகம் குறித்துத் தெளிவான புரிதல் கிடைக்கும். சர்வதேச பிரச்சினைகள், பிராந்திய சவால்கள் மற்றும் மாறுபட்ட சமூகங்கள் குறித்துத் தெரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்குச் சர்வதேச கண்ணோட்டத்தை வளர்க்க உதவுகிறது.
சுதந்திரமாக இருப்பது: வேறு நாட்டிற்குச் செல்லும்போது குழந்தைகள் புதிய பள்ளி முறைக்கு மாற்றுவது முதல் உள்ளூர் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொள்வது வரை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இது அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது.
குடும்பம் முக்கியம்
எமோஷ்னல் நுண்ணறிவு: இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக முறைகளை அவர்கள் பார்க்கிறார்கள். இங்குள்ள குடும்ப கட்டமைப்புகளைப் பார்க்கிறார்கள். இது அவர்களின் எமோஷ்னல் நுண்ணறிவு (Emotional Intelligence) வளர்க்க உதவும். அவர்கள் பல்வேறு வகையான மக்களுடன் தொடர்பு கொள்ளவும், பல்வேறு விஷங்களைப் புரிந்து கொள்ளவும் உதவும். இதன் மூலம் அவர்களின் சமூகத் திறன்களை மேம்படுகிறது.
வலுவான குடும்பப் பிணைப்புகள்: இந்தியக் குடும்பங்களில் நெருக்கமான உறவு இருக்கும். உறவினர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது எனது குழந்தைகளுக்கு உறவினர்களின் முக்கியத்துவத்தை உணர உதவுகிறது. இது அமெரிக்க மாடலில் இருந்து மிகவும் வித்தியாசமானது.
எளிமை
எளிமை மற்றும் நன்றி உணர்வு: பணக்காரர்கள் வறுமையில் இருப்போர் என இரு தரப்பும் இருக்கும் நாடுகளில் வளரும்போது தான் குழந்தைகளுக்கு நன்றியுணர்வு, எளிமை மற்றும் தங்களிடம் இருப்பதை நினைத்துச் சந்தோசப்படும் பண்புகள் அதிகரிக்கும்.
சர்வதேச தொடர்பு : எனது குழந்தைகள் உலகம் முழுவதும் இருந்து வரும் மக்களுடன் நட்பை உருவாக்குவார்கள். இது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் நிச்சயம் பெரியளவில் உதவும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications