சீனாவில் எகிறும் கேஸ்கள்.. இந்தியாவில் 4ஆவது அலை தீவிரமடையுமா.. நிபுணர்கள் சொல்வது என்ன?
டெல்லி: இனி வரும் கொரோனா அலைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை முடிவுக்கு வரும் நிலை உள்ளது. காரணம் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா அலை தீவிரமடைந்து வருகிறது.
சீனா, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் 4 ஆவது அலை என சொல்லப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் 4-ஆவது அலை பாதிப்புக்குள்ளாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்று நோயியல் துறை நிபுணர் சஞ்சய் ராய் கூறுகையில் இந்தியா மிகவும் அழிவுகாரமான 2ஆவது அலையை சந்தித்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதுவே நமது பலம். ஏனென்றால் இயற்கை தொற்று நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் தடுப்பூசி பாதுகாப்பு உள்ளது.

கொரோனா அலை
எனவே எதிர்கால கொரோனா அலைகளின் கடுமையான தாக்கம் சாத்தியம் இல்லை. எனவே கட்டாய முக கவச உத்தரவை தளர்த்த அரசு பரிசீலிக்கலாம் என்றார். இதுகுறித்து சந்திரகாந்த் லஹரியா (தொற்றுநோயியல் நிபுணர்) கூறுகையில் ஓமிக்ரான் பரவல் பற்றிய செரோ சர்வே, தடுப்பூசி பாதுகாப்பு உள்ளிட்ட தரவுகளை நாங்கள் ஆராய்கிற போது இந்தியாவில் கொரோனா முடிந்துவிட்டது என்று முடிவு செய்வது தர்க்கரீதியானது.

கட்டாய முகக் கவச உத்தரவு
எனவே பல மாதங்களுக்கு புதிய எழுச்சிக்கோ, புதிய உருமாறிய கொரோனாவுக்கோ வாய்ப்பு மிகவும் குறைவு. கட்டாய முகக் கவச உத்தரவை தளர்த்தலாம் என்றார். இதுகுறித்து கோவிட் பணிக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில் அதிக தடுப்பூசி பாதுகாப்பு பரவலான நோய் பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தியா கடுமையான அலைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

2 தடுப்பூசி டோஸ்
ஆனால் புதிய உருமாற்றங்களுக்கு வாய்ப்பு எப்போதும் இருப்பதால், அதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது. 2ஆவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். 18 வயது வரையிலானவர்களும் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டு முடித்துவிட வேண்டும் என தெரிவித்தனர். இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications