அத்தனை மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றுதான்.. அடித்து கூறும் சர்வே! எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா பட்ஜெட்
பட்ஜெட்டில் மக்களுக்கு பல்வேறு எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கலாகிறது.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை இன்னும் கொஞ்ச நேரத்தில் தாக்கல் செய்யும் நிலையில், பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இரு அமர்வுகளாக வரும் ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.
EV துறையில் 2030-க்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள்.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
ஆய்வறிக்கை
முன்னதாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-24இல் 6.5% என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22இல் இது 8.7%ஆகவும் அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் இது 7%ஆகவும் இருந்தது நினைவுகூரத்தக்கது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் விரைவாக மீண்டுவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட்
இதனிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு மோடி 2.o அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தனிநபர் வருமான வரி உள்ளிட்ட சில பிரிவுகளில் முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு என்ன எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறித்து ஆக்ஸிஸ் மை இந்தியா நாடு முழுக்க கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் மக்கள் எதன் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்பது குறித்த தங்கள் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள்
இதில் சோப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று 73 சதவீதம் பேர் கூறுகிறார்கள். அதே நேரம் 54 சதவீதம் பேர் அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்கள். மேலும், 44 சதவீதம் பேர் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்றும் 32 சதவீதம் பேர் வீட்டுக்கடன் விலக்கு வரம்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
வருமான வரி
அதேபோல தனிநபர் வருமான வரி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. 26% பேர் வருமானவரி விகிதம் 5 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதேபோல கூடுதலாக, 25 சதவீதம் பேர் விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உயர்த்த வேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும், 32% பேர் சிறந்த வங்கி நெட்வொர்க் தேவை என்றும் 19% பேர் சிறந்த தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் 5ஜி சேவை தேவை என்றும் கூறுகிறார்கள். அதேபோல சிறந்த இணையப் பாதுகாப்பு வேண்டும் என்று 18 சதவீதம் பேர் கூறுகிறார்கள்.
எண்ணெய் விலை
இந்தியப் பொருளாதாரத்தை எண்ணெய் விலை கணிசமாகப் பாதிக்கும் என்று சுமார் 22% பேர் கருதுகின்றனர். அதேபோல பணவீக்கம் மற்றும் 2024 மக்களவை தேர்தல் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 16% சதவீதம் பேர் நினைக்கிறார்கள். 14 % பேர் அரசின் கொள்கைகள், 11% பேர் ரஷ்யா-உக்ரைன் போர் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். மேலும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 59 சதவீத குடும்பங்களுக்கான ஒட்டுமொத்த வீட்டுச் செலவு 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
சுகாதார செலவு
குறிப்பாக அத்தியாவசிய, தனிப்பட்ட வீட்டுப் பொருட்களுக்கான செலவு 40% அதிகரித்துள்ளது. அதேபோல அத்தியாவசியமற்ற பொருட்களான ஏசி, கார் மற்றும் குளிர்சாதனப் பெட்டி செலவு 5% அதிகரித்துள்ளது.. மேலும், சுகாதாரம் சார்ந்த செலவுகள் 33% வரை அதிகரித்துள்ளது. சுகாதாரத்தில் செலவு குறைந்தால் மட்டுமே மக்கள் மற்ற பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இப்படி சுகாதார பொருட்களுக்கான செலவு குறைந்து கொண்டே வருவது மக்கள் பிற பொருட்களை வாங்குவதில் ஆர்வத்தைக் குறைக்கும்.
எதிர்பார்ப்பு நிறைவேறுமா
அதேபோல டிவி, இன்டர்நெட், ரேடியோ போன்ற ஊடகங்களின் நுகர்வு 20% வரை அதிகரித்துள்ளது. 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,100 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், எதிர்பார்ப்புகளை நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்துப் பார்க்கலாம்.