காசியும் தமிழ்நாடும் ஒன்னு தான்.. தமிழில் ட்வீட் போட்ட யோகி! ரீ ட்விட் செய்த மோடி! இது தான் ப்ளானா?
டெல்லி : 'காசி தமிழ் சங்கமம்' குறித்து உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் வரவேற்பு பதிவிட்டுள்ள நிலையில், அதனை பிரதமர் மோடியும் தமிழ் கேப்சனோடு ரீ - ட்விட் செய்துள்ளார். இதனை பாஜகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் காசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது என பாஜக கூறி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2 ஆயிரத்து 592 பேர் பயணம் செய்கிறார்கள். முதலாவது ரெயில் நேற்று புறப்பட்ட நிலையில், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

காசி தமிழ் சங்கமம்
ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில். இதில் சிறப்பு சொற்பொழிவுகள் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. மேலும் இரு மாநில கலாச்சாரங்களை ஒற்றுமைகளையும் பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது. ஒரு மாதம் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் உத்திரபிரதேச மாநில அரசு சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

யோகி ஆதித்யநாத்
இந்நிலையில் இது குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள யோகி,"காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். 'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை'யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம். அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு" என தமிழில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி
மேலும்,"பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் 'காசி-தமிழ் சங்கமம்' விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. ,இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும். இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் 'ராம சேது' போலவே இருக்கும்" எனவும் கூறியிருக்கிறார். மேலும் யோகி ஆதித்யநாத்தின் இந்த பதிவை பிரதமர் மோடியும்,"ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணர்வை கொண்டாடும் தனித்துவ நிகழ்வு!" என ரீட்விட் செய்துள்ளார்.

கடும் விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவிட்டுள்ளதை பாஜகவினர் வெகுவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவின் 'ஒரே நாடு ஒரே மொழி' 'ஒரே நாடு ஒரே தேர்தல்' வரிசையில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்'நிகழ்ச்சி இருக்கும் எனவும், இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலை என பல அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications