பொய் சொன்ன நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்.. ராகுல் காந்தி பரபர கோரிக்கை!
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலகி வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலகி வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
ரபேல் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இதனால் ரபேல் ஊழல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தினமும் ரபேல் தொடர்பாக காங்கிரஸ் பாஜக இடையே கடும் விவாதம் நடந்து வருகிறது. முக்கியமாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே கடுமையான விவாதம் நடந்து வருகிறது.
என்ன சொன்னார்
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் எச்ஏஎல் புறக்கணிக்கப்படுவது குறித்த, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''எச்ஏஎல் எங்கும் புறக்கணிக்கப்படவில்லை. எச்ஏஎல் வேறு நிறைய ஆர்டர்களை பெற்று வருகிறது. எச்ஏஎல் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்டர்களை பெறுகிறது. இது எச்ஏஎல்லுக்கு பெரிய பலன் அளிக்கும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
எச்ஏஎல் பதில்
இதற்கு பதில் அளித்த எச்ஏஎல் அதிகாரிகள் சிலர், இதுவரை அப்படி ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. ஒப்பந்தம் குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை. அதற்கான பணிகளும் நடக்கவில்லை. இதுவரை ஒரு ரூபாய் கூட ஒப்பந்தம் தொடர்பாக எங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை என்று கூறினார்கள்.
|
ராகுல் காந்தி பதில்
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். அதில் ''நீங்கள் பொய் சொன்னால், அதை மறைக்க நிறைய பொய்கள் சொல்ல வேண்டி இருக்கும். பிரதமர் மோடியின் ரபேல் பொய்களை காப்பாற்ற நிர்மலா சீதாராமன் லோக் சபாவில் பொய் சொல்லி இருக்கிறார். நாளை அவர் சொன்ன 1 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் குறித்த தகவல்களை நிரூபிக்க அவர் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் பதவி விலகட்டும்'' என்று கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் பதில்
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''இன்னும் நாங்கள் இதற்கான ஒப்பந்தம் செய்யவில்லை. 1 லட்சம் கோடிக்கான ஒப்பந்தம் இனிதான் போட இருக்கிறோம். அதற்குள் ஒப்பந்தம் போட்டதாக யாரையும் ஏமாற்ற வேண்டும். முழுதாக படித்துவிட்டு தகவலை பரப்பவும்.'' என்று கூறியுள்ளார்.