காவிரி உபரிநீர் திட்டம்.. முன்னாள் முதல்வரிடம் கெஞ்சினேன்.. இன்னாள் முதல்வர்?.. அன்புமணி ராமதாஸ்
தருமபுரி: காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன், கெஞ்சினேன், ஆனால் அவர் உறுதியளித்துவிட்டு நிதி இல்லை என கூறிவிட்டார் என பாமக தலைவரும் மாநிலளங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் நடைபயண பிரச்சாரத்தினை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மூன்றாம் நாள் பிரச்சாரத்தை கம்பைநல்லூரில் தொடங்கினார்.
அங்கே பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த பொழுது பேசியதாவது, "மேட்டூர் உபரி நீர் திட்டம் நீரேற்றும் முறையில் செயல்படும் திட்டம் தான், அதேபோலதான் தர்மபுரி காவிரி உபநீர் திட்டத்தின் செயல்படுத்த சொல்கிறோம். ஏற்கெனவே போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி தற்போது நடைபயணம் மேறகொள்கிறோம். இதற்கு மேலும் அரசு அறிவிக்கவில்லை என்றால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம். இது வாழ்வாதார பிரச்சனை. ஆடிப்பெருக்கு அன்று ஒரே நாளில் மட்டும் 16 டி எம் சி தண்ணீரானது கடலில் கலந்துள்ளது. இதுவரை இந்த வருடம் 185 டிஎம்சி கடலில் கலந்து இருக்கிறது.
“எங்கள் அமைதிக்கும் ஓர் எல்லையுண்டு” - காவிரி நடைப்பயணத்தில் அரசை வெளுத்து வாங்கிய அன்புமணி
காவிரி
காவிரி இவ்வழியே சென்றாலும் பெரும்பாலும் இங்குள்ள மக்கள், விவசாயிகள் வறட்சியையே சந்திக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் நீர் மேலாண்மை திட்டம் பின்தங்கியிருப்பதே ஆகும். மழை வெள்ள நீரை சேமிப்பதே புத்திசாலித்தனம். காவிரி நீருக்காக கர்நாடக மாநிலத்திடம் கடுமையாக சண்டையிட்டு வருகிறோம். வரும் நீரை மிச்சம் செய்ய நாம் ஏற்பாடு செய்யவில்லை. 55 ஆண்டுகாலம் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். ஆனால், நமது நீர் நிலைகள் காப்பாற்றப்படவில்லை, புதிய நீர் நிலைகள் உருவாக்கப்படவில்லை, வரும் நீரை காப்பாற்றவும் ஏற்பாடுகள் செய்யவில்லை. இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நான் வேண்டுகோளாகவே வைக்கிறேன். அடுத்த 50 ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீர் மேலாண்மைக்கு திட்டங்கள் வகுக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் நாம் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கவுள்ளோம். அதனை தவிர்க்க வருகின்ற நீரை சேகரிக்க கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
புதிய நீர்த்தேக்கம்
புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்குங்கள். மேட்டூர் அணைக்கு கீழே நீர்த்தேக்கம் இல்லை. மேட்டூர் அணையில் 93 டி.எம்.சி. சேமிக்கலாம். அதனைத் தவிர்த்து, மேலணை, கல்லணை, கீழணை போன்றவை மன்னர்கள் காலத்தில் உள்ளன. காவிரி ஆற்றில் ஒவ்வொரு 10 கி.மீ தூரத்திலும் ஒரு தடுப்பணை கட்டலாம். ஒவ்வொன்றிலும் ஒரு டிஎம்சி சேமிக்கலாம். இவ்வாறாக 50 தடுப்பணை கட்டவேண்டும். அதில் 50 டி.எம்.சி கொள்ளளவு நீர் சேகரிக்கலாம். கொள்ளிடம், கல்லணையில் சேர்த்து 3 முதல் 4 டி.எம்.சி கூடுதலாக சேகரிக்கலாம். இவ்வாறாக செய்வதால் நீரை தேக்கி வைக்க இயலும். இப்படி செய்தால் அடுத்த 3 ஆண்டுகளில் 70 டி.எம்.சி காவேரியில் கிடைக்கும். இது அவசியமானது. கடலுக்கு செல்லும் நீரை மிச்சப்படுத்தி நாம் உபயோகம் செய்வதே நீர் மேலாண்மை. காவேரி மட்டுமல்லாது பல ஆறுகளிலும் இதனை செயற்படுத்த வேண்டும். தாமிரபரணி, வைகை, தென்பெண்ணை என மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆறிலும் வெள்ளம் போகிறது. அங்கும் இதே திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உபரி நீர் திட்டம்
தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் உறுதி அளித்ததாக திமுகவினர் போஸ்டர் அடித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்க,
"திமுகவினருக்கு பிறரின் திட்டத்தை அல்லது அறிவிப்பை தாங்கள் செய்ததாக கூறுவது எளிதானது தான். அந்த செயலில் அவர்கள் பிஎச்டி முடித்துள்ளனர். எங்களுக்கு அது நோக்கம் இல்லை. முதல்வர் அறிவிக்கட்டும், அதனை நடைமுறைப்படுத்தட்டும். இது கட்சி சார்பற்ற நிகழ்வு. தருமபுரி மாவட்டத்துக்கு நீண்ட கால பிரச்சனை. தமிழகத்திலேயே மிகக்குறைந்த மழையளவு கொண்ட மாவட்டம், ஆனால் மேற்கு எல்லையில் காவேரி & வடக்கு எல்லையில் தென்பெண்ணை என 2 ஆறுகள் செல்கிறது. ஆனால், இங்குள்ள மக்களுக்கு உபயோகம் செய்ய நீர் இல்லை. இது மிகப்பெரிய கொடுமை.
அத்திக்கடவு திட்டம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 முறை நானும், மருத்துவர் அய்யாவும் போராட்டம் நடத்தினோம். 50 ஆண்டுகால கனவு இது. மிகப்பெரிய திட்டம். ஆனால், இதனை ரூ.1500 கோடியில், காளிங்கராயன் கால்வாயில் இருந்து நீரை எடுப்பதாக சுருக்கி இருக்கின்றனர். பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வர ரூ.3500 கோடி செலவாகும் என கோரிக்கை வைத்தோம். அவர்கள் செலவை சுருக்கி இருப்பதாக நினைத்து திட்டத்தினை சுருக்கிவிட்டார்கள். இது நடைமுறைக்கு சரிப்படாது. இதேபோல, மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் உபரிநீர் திட்டம் எடப்பாடி தொகுதிக்கு தண்ணீர் எடுத்து வர திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. நாங்கள் சேலம் மாவட்டம் முழுவதும் 11 தொகுதிக்கும் தண்ணீர் எடுத்து செல்ல வலியுறுத்தினோம். இதுபோன்ற திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
முதல்வரை சந்திப்பீர்களா
இது தொடர்பாக முதலமைச்சர்களை சந்திப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட போது, "முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்தேன், கெஞ்சினேன். அவர் பார்க்கலாம் என்று கூறிவிட்டு தேர்தலின் போது வாக்குறுதியாக அறிவித்து, தேர்தல் முடிந்ததும் நிதி இல்லை என்று கூறிவிட்டார். இன்றைய முதல்வர் ஸ்டாலினிடமும் திட்டம் குறித்து கோரிக்கை வைத்து வருகிறேன். இந்த திட்டத்தால் 15 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். மாவட்டத்தின் 80 % மக்கள் இதனால் பூரண பலனடைவார்கள். இந்த திட்டத்தை அரசு முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். இவ்வுளவு போராட்டங்கள் செய்ய அவசியம் இல்லை.
தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டம்
தருமபுரி - மொராப்பூர் ரயில்வே திட்டம் பற்றி கேட்ட போது, இந்த திட்டத்திற்காக நான் எம்.பி. யாக இருந்த சமயத்தில் இரயில்வே துறை அமைச்சரை பலமுறை சந்தித்தேன். நான் பொறுப்பில் இருக்கும்போது 3 அமைச்சர்கள் மாறினார்கள். ஒவ்வொருவரையும் சந்தித்து, இறுதியாக பியூஸ் கோயிலை சந்தித்து வலியுறுத்தினேன். அவர் அடிக்கல் நாட்டிவிட்டு, நிதி ஒதுக்கி சென்றுள்ளார். தேர்தல் நடைபெற்று மாற்றம் வந்துள்ளது. மக்களால் தருமபுரி தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி குரல் கொடுக்க வேண்டும். தருமபுரியின் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். அவர் என்ன செய்கிறார்? நாடாளுமன்றத்திற்கு சென்று போட்டோ எடுத்து வந்தால் போதுமா? நானும் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வலியுறுத்தி வருகிறேன். தருமபுரி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்றார் அன்புமணி.