“எங்கள் அமைதிக்கும் ஓர் எல்லையுண்டு” - காவிரி நடைப்பயணத்தில் அரசை வெளுத்து வாங்கிய அன்புமணி
தருமபுரி: காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3வது நாளாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Recommended Video
தருமபுரியை அடுத்த கம்பைநல்லூர், மொரப்பூர், ஆரூர், கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது மக்களிடையே பேசிய அவர், "காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். எங்கள் அமைதிக்கும் ஓர் எல்லை உண்டு" என்று கூறியுள்ளார்.
காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாள் நடைப்பயண பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 19ம் தேதி ஒகேனக்கலில் தொடங்கினார். 3 நாள் பயணமான இது இன்று பாப்பிரெட்டிபட்டியில் முடிவடைகிறது. தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் கூறி இந்த நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ளார்.
இந்த நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று தருமபுரியின் கம்பை நல்லூர் பகுதியில் மக்களிடையே உரையாற்றிய அவர், "காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். எங்கள் அமைதிக்கும் ஓர் எல்லை உண்டு" என்று எச்சரித்துள்ளார். மேலும், "கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. இந்த பிரச்னை கட்சிக்கும், சாதிக்கும், மதத்திற்கும், மொழிக்கும் அப்பாற்பட்டது.
இதை அனைத்தும் கடந்து நாம் ஒன்று சேர்ந்தால்தான் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தும். இது தொடர்பாக இதுவரை பாமக மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைதியாகதான் இருந்தது. பேரணி, 10 லட்சம் கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம் என எல்லாமும் அமைதியாகத்தான் நடந்தது. தற்போது நடைபெற்று வரும் மூன்று நாள் நடைப்பயணம் கூட அமைதியாகத்தான் நடைபெற்று வருகிறது. ஆனால் எங்கள் அமைதிக்கும் ஓர் எல்லையுண்டு.
செல்லும் இடமெல்லாம் சகோதரர்கள் கேட்கிறார்கள். இதற்கடுத்த இயக்கம் என்னவென்று. நான் அனைவரையும் அமைதியாக இருங்கள் என்றும், அரசு இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றும் என்றும் கூறி வருகிறேன். அவர்கள் மீண்டும் கேட்கிறார்கள். ஒருவேளை அரசு இதனை நிறைவேற்றவில்லையென்றால் என்ன செய்வது? என. நான் கூறிவிட்டேன் இல்லையெனில் உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் செய்துவிடுங்கள் என. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் போராட்டம்தான்.
இந்த மாவட்டத்தில் பிறந்தாளே போராடிதானே ஆக வேண்டும்? எனவே அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீர் தமிழக அரசே. தென்பெண்ணை, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் இங்கு தண்ணீர் இல்லை. இந்த காவேரி உபரி நீர் திட்டம் மூலம், மாவட்டத்தில் உள்ள சுமார் 18 லட்சம் மக்களில் ஏறத்தாழ 15 லட்சம் மக்கள் பயனடைவார்கள். 80 சதவிகித மக்களுக்கு பயன்படும் ஒரு திட்டத்தை அரசு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும். இதுதான் நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு.
ஆனால் தற்போது வரை இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். எனவே தாமதப்படுத்தாமல் இத்திட்டத்தை உடனே அறிவித்திடுங்கள்" என அன்புமணி ராமதாஸ் தனது உரையில் கூறியுள்ளார்.