பாறையில் நட்ட மரம்! ரூ.50 லட்சம் அபேஸ் புகார்.. அதிமுக ‘மாஜி’ திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கம்!
திண்டுக்கல் : மரம் வளர்க்கும் திட்டத்தில் மோசடி செய்ததாக கம்யூனிஸ்டு கட்சியினர் என்மீது ஒரு பொய்யான புகாரை அளித்துள்ளனர் எனவும், உண்மையை ஆராயாமல் என்மீது குற்றச்சாட்டு சுமத்துவதில் எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் விளக்களித்துள்ளார்.
திண்டுக்கல் மலைக்கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க மலையாகும். இம்மலையினை பசுமைமிக்கதாக மாற்ற கடந்த அதிமுக அரசு முடிவெடுத்து கடும் பாறைகளிலும் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இச்சி, கல் இச்சி உள்ளிட்ட சிறந்த மரவகைகளை சிறப்பு நடவு முறையை பயன்படுத்தி நட முடிவெடுத்தது.
மேலும் மரம் ஒன்றிற்கு ரூ.1000/- வீதம் 5000 மரக்கன்றுகளை ரூ.50 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் தொடக்கவிழா நடத்தப்பட்டு, படிபடியாக செயல்படுத்தப்பட்டது.

மோசடி புகார்
தற்போது இத்திட்டம் குறித்து ஆய்வு செய்த போது இத்திட்டத்தில் நடப்பட்ட 5000 மரக்கன்றுகளில் ஒன்று கூட உயிருடன் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இங்கு மரம் நடப்பட்டதற்கு சாட்சியாக காலி டிரம்களும், சொட்டு நீர் பாசன குழாய்களும் மலையடிவாரத்தில் காட்சிப் பொருளாக கிடக்கின்றன. அரசுக்கு சொந்தமான ரூ.50 இலட்சம் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டை பசுமையாக்கும் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து, அப்போதைய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் மீது தாங்கள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் கடந்த திங்கட்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் சீனிவாசன்
இந்நிலையில் உண்மையை ஆராயாமல் என்மீது குற்றச்சாட்டு சுமத்துவதில் எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் விளக்களித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"லைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில் மோசடி செய்ததாக கம்யூனிஸ்டு கட்சியினர் என்மீது ஒரு பொய்யான புகாரை அளித்துள்ளனர். எந்த ஒரு திட்டத்தை குறித்து அறிய விரும்பினாலும் அது தொடர்பான அலுவலர்களை விசாரித்தாலே முழு உண்மையும் தெரியவரும்.

கடும் கற்பாறை
திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது வனத்துறை அதிகாரிகள் 1250 மரக்கன்றுகள் மலையின் மேற்பகுதியிலும், 3750 மரக்கன்றுகள் மலையின் கீழ்பகுதியிலும் நடவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மலைக்கோட்டை கடும் கற்பாறைகளால் ஆனது. எனவே பரிச்சார்த்த முறையில் மரங்கள் நடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2018-ல் கஜாபுயல் காரணமாகவும், 2019-ல் மலையில் ஏற்பட்ட தீயினாலும் மரக்கன்றுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

சம்பந்தமும் இல்லை
எனவே எஞ்சிய மரங்களை காப்பாற்ற வனத்துறை மூலம் உறுதி செய்யப்பட்டது. சேதமடைந்த மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்ய தொல்லியல்துறையினரிடம் பலமுறை கேட்டும் வனத்துறைக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா ஒன்று நான் அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இன்னும் 4 மாதங்களில் திறக்கப்பட உள்ளது. பழனி-உடுமலை சாலையில் மூலிகை பூங்கா அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டாலே அதற்குரிய பதிலை அளிப்பார்கள். ஆனால் உண்மையை ஆராயாமல் என்மீது குற்றச்சாட்டு சுமத்துவதில் எந்த சம்பந்தமும் இல்லை" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications