குழந்தை இல்லையே..ஏக்கத்தில் இரவல் வாங்கிய கீர்த்திகா! உடம்பெல்லாம் சூடு.. மர்மமாய் உயிரிழந்த சிறுமி!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த தம்பதியினரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கௌரி ஆகிய தம்பதிகளின் ஒரே மகளான ஷிவானி என்ற 4 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இவர்களது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா என்பவர், பல்லடத்துக்கு அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில், அடிக்கடி வீட்டிற்கு வரும் போது, சிறுமி ஷிவானியுடன் கீர்த்திகா நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அவர்களின் வீட்டிற்கு வந்த கீர்த்திகா ஷிவானியை தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்று சிறிது நாள் வைத்திருந்து விட்டு மீண்டும் கொண்டு வந்து விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

மர்ம மரணம்
சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷிவானி அவர்கள் வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று ஷிவானி வீட்டில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் கீர்த்திகா. இந்நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை சோதித்த போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சூடு வைத்த தீக்காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள் இதுகுறித்து கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் சிகிச்சையில் இருந்த ஷிவானி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் போரின் வடமதுரை போலீசார் ராஜேஷ் குமார்-கீர்த்திகா தம்பதியை கைது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் குழந்தை இல்லாததால் பல நாட்களாக ஏக்கத்தில் இருந்த ராஜேஷ்குமார் - கீர்த்தி தம்பதியினர் பிரகாஷின் குழந்தை ஷிவானியை அழைத்து வந்து கொடுமை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம் சிறுமியின் உடலில் சூடு வைத்த காயங்களோடு மேலும் பல காயங்களும் உள்ளதால் இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் கொலைக்கான முழுமையான காரணத்தை போலீசார் தெரிவிக்காத நிலையில் விசாரணைக்கு பிறகு விபத்தா அல்லது திட்டமிட்டு சிறுமி கொலை செய்யப்பட்டாரா என தெரிய வரும் என போலீசார் கூறி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications