13 நாள் பச்சிளம் குழந்தைக்கு டாஸ்மாக் சரக்கு.. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போதை பெண் பயங்கரம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பிறந்து 13 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தைக்கு டாஸ்மாக் சரக்கை மதுபோதையில் பெண் ஒருவர் வாயில் ஊற்றிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வீதிக்கு வீதி திறந்துவிடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளால் நாள்தோறும் சீரழியும் குடும்பங்கள் ஏராளம். மதுபான கடைகளால் செத்து மடியும் ஆண்கள் ஒருபக்கம்.. அதிகரிக்கும் இளம் விதவைகள் மறுபக்கம். இது ஒரு சமூகத்தில் புரையோடிப் போன நோயாகிப் போய்விட்டது.
ஆணுக்குப் பெண் சளைத்தவரில்லை என்கிற சமத்துவம் மதுபான கூடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. நகர்ப்புறங்களில் கோலோச்சிய இந்த சமூக சமத்துவம் குக்கிராமத்து மதுபான கடைகளிலும் கூடி கும்மாளமடிக்கிறது. இதன் உச்சமான கொடூரத்தைத்தான் திண்டுக்கல் பேருந்து நிலைய காட்சி காட்டி இருக்கிறது.

திண்டுக்கல் மதுரை பேருந்து நிலையம்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் தென்பகுதியில் மதுரை செல்லும் பேருந்துகள் நிற்கும். மதுரை, கொடைக்கானல், சென்னை, நத்தம், காரைக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் தென்பகுதியில் இருந்து புறப்படும். அந்தப் பகுதியில் நடைபாதை கடை வைத்திருப்பவர்கள் கண்முன்னே மதுபோதையில் கையில் பச்சிளம் ஆண் குழந்தையுடன் பெண் ஒருவர் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தார். முகம் சுளிக்க வைத்த அந்த பெண்ணின் நடத்தை அனைவரையும் பார்க்க வைத்தது.

பதறவைத்த காட்சிகள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அத்தனை ஜனங்கள் கூடி நிற்க, எந்தவித பதற்றமுமே இல்லாமல் கீழே அமர்ந்து மடியில் சுருட்டிக் கொண்டு வந்த டாஸ்மாக் சரக்கு பாட்டில்களில் ஒன்றை திறந்தார் அந்தப் பெண். ராவாக அங்கேயே மடமடவென குடித்ததுடன் நிற்காமல் அடுத்தது அந்த பெண் செய்ததுதான் மிகப் பெரும் கொடூரம்!

பச்சிளம் குழந்தைக்கு மது
மடியில் வைத்திருந்த பச்சிளம் குழந்தையின் வாயிலும் டாஸ்மாக் சரக்கை ஊற்றிவிட்டார். அப்படி ஊற்றும் போதை பச்சிளம்குழந்தையை சரமாரியாக தாக்கியும் இருக்கிறார். இதனால் பதறிப்போன அந்த ஜனம், போலீசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தது. அத்துடன் அந்த படுபாதகப் பெண்ணிடம் இருந்து குழந்தையையும் பறித்தனர்.

தப்பி ஓட்டம்- குழந்தை கடத்தல் கோஷ்டி?
பின்னர் அங்கு வந்த போலீசிடம் குழந்தையை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்தக் குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அந்த மதுபோதை பாதகியிடம் போலீசார் விசாரித்த போது அவர் கரூரில் இருந்து வருவதாக மட்டும் கூறியிருக்கிறார். குழந்தை குறித்து எந்த விவரத்தையும் அவர் தெரிவிக்கும் நிலையிலும் இல்லை. இதனால் குழந்தையை அவர் கடத்திக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அப்பெண்ணை அனுமதித்தனர். ஆனால் அங்கிருந்து அந்தப் பெண் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications