கூட்டுறவு வங்கிகளில் ரூ.15 கோடி மோசடி... தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி - ஐ. பெரிய சாமி
தமிழகத்தில் இருக்க கூடிய கூட்டுறவு கடன் சங்கங்களிலும், கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டதில் ஏறத்தாழ குறைந்த பட்சம் 15 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனில் மோசடி செய்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். தவறு செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து கடன் தள்ளுபடி தொடர்பாக பணிகளில் கூட்டுறவு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்
சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அனைத்து கூட்டுறவு நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில், கடந்த அதிமுக அரசின் ஆட்சியின் போது ஏழை எளிய மக்களுக்கான நகை கடன் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நகைக்கடன் முறைகேடு
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள், தொகை, கடன் கணக்கு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பகுப்பாய்வு செய்ததில் நிறைய விதிமீறல்கள் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நகையே இல்லாமல் பணம்
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்கள் இல்லை. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தியோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்ததாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருந்திருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆரணியில் மோசடி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் தலைவராக அதிமுக நகர செயலாளர் அசோக்குமார் பதவி வகித்து வருகிறார். வங்கியின் பொதுமேலாளராக லிங்கப்பன், காசாளராக ஜெகதீசன், உதவி அலுவலராக சரவணன் உள்பட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த 2 மாதங்களாக திருவண்ணாமலை மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கீழ்இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகளிலும் வேலூர் மண்டலத்திலிருந்து வந்திருந்த கூட்டுறவு அலுவலர்கள், நகை மதிப்பீட்டாளர்கள், மேலாளர்கள் நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்ததில் போலி நகைகள் அடமானம்பெற்று 2 கோடியே 51 லட்சம் ரூபாய் முறைகேடாக கடன் வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் க.ராஜ்குமார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 4 ஆயிரத்து 537 பொது கடன்கள் ரூ.29கோடியே 12 லட்சம் வழங்கப்பட்டு நிலுவையாக இருந்துள்ளது. இவ்வாறு கடன் பெற்றவர்கள் வைத்த நகைகள் கடந்த 21-ந் தேதி சரி பார்க்கப்பட்டன, அப்போது 77 பேர் அடகு வைத்த நகைகள் போலியானதாகவும் தரம் குறைவானதாகவும் உள்ளது. இவர்களுக்கு வங்கியின் மூலம் ரூ, 2 கோடியே 39 லட்சம் அளவில் முறைகேடாக நகை கடன் வழங்கப்பட்டுள்ளது
பணியிடை நீக்கம்
78 கிராம் நகை அடகு வைத்தால் கடன் அட்டையில் 165 கிராம் நகை அடகுவைக்கப்பட்டதாக பதிவு செய்து ஒருவருக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 77 பேர் உள்பட மொத்தம் 82 பேருக்கு முறைகேடாக 2 கோடியே 51 லட்சம் வரை கடன் வழங்கியுள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆரணி நகர கூட்டுறவு வங்கி மேலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீசன், உதவி அலுவலர் சரவணன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சங்க தலைவராக இருந்த அசோக்குமார் 6 மாத காலத்திற்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மோசடிகள் கண்டுபிடிப்பு
கடன் வழங்கிய காலத்தின்போது ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனராக இருந்த ஜி.கல்யாணகுமார் பணியிட மாற்றம் செய்து அவருக்கு பதில் தற்போது கூட்டுறவு சார் பதிவாளர் ரமேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஆரணி நகர கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கூண்டோடு கலைக்கப்படுவதாக திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் க. ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி
இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற மோசடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழகத்தில் இருக்க கூடிய கூட்டுறவு கடன் சங்கங்களிலும், கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டதில் ஏறத்தாழ குறைந்த பட்சம் 15 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனில் மோசடி செய்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் ஐ. பெரியசாமி, தவறு செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நகையே இல்லாமல் பணம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து பணம் கொடுக்கபட்டுள்ளது. அதிகமான குழுக்களை வைத்து தமிழ்நாட்டில் இருக்க கூடிய அனைத்து வங்கிகளிலும் , கூட்டுறவு கடன் சங்களிலும் ஆய்வு செய்யும் பணியினை பிற மாவட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தெரிவித்தார். போலி நகைக்களை அடகு வைத்து வங்கிகளில் பணம் பெறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
மோசடி செய்த அதிகாரிகள் நிறைய சஸ்பெண்ட் செய்துள்ளோம் கிரிமினல் நடவடிக்கை கொடுக்கபட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுதுறை அதிகாரிகள் உத்தரவிடபட்டுள்ளது. கூட்டுறவு துறையில் காலிபணியிடங்கள் தீபாவளி முடிந்தவுடன் அறிவிக்க உள்ளோம். வெளிப்படை தன்மையுடன் யாரும் ஒரு பைசா கொடுக்காமல் பணியிடங்கள் நிரப்பபடும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.