திண்டுக்கல்லுக்கு திடுக்குனு அதிர்ஷ்டம்..ரிங்ரோடு பணி சுறுசுறு! 100 சதுர அடி கிடைச்சாலும் விடாதீங்க!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பல ஆண்டுகளாகக் காத்திருந்த ரிங் ரோடு (சுற்றுச் சாலை) திட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை நேரடியாக இணைக்கும் இந்தச் சாலை, போக்குவரத்துக்கு பெரிய நிவாரணமாக அமையவுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி நிலங்களின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, ரியல் எஸ்டேட் வணிகம் சூடுபிடித்துள்ளது.
திண்டுக்கல் தென் மாவட்டங்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை மூலம் கோவை, திருச்சி, மதுரை என மூன்று முக்கிய நகரங்களை நான்கு திசைகளிலும் இணைக்கும் புள்ளியாகவும் திண்டுக்கல் உள்ளது.
திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-கோவை, திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-நத்தம் என திண்டுக்கல்லைச் சுற்றி ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

திண்டுக்கல் சுற்றுச்சாலை
ஆனால், ஒரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மற்றொரு நெடுஞ்சாலைக்குச் செல்ல, நகருக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலும் நேர விரையமும் அதிகரித்து வந்தது. குறிப்பாக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நேரடியாக இணைக்கும் சுற்றுச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்து வந்தது.
மதுரை திருச்சி சாலை
இதற்காக நில அளவீடு, திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை முடிந்திருந்தாலும், பல ஆண்டுகள் அது நிலுவையில்தான் இருந்து வந்தது. தற்போது சுமார் 160 கோடி ரூபாய் செலவில் இந்த ரிங் ரோடு பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் 60 கோடி ரூபாய் பணம் நில இழப்பீட்டுக்காக மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைந்துள்ள புதிய சுற்றுச் சாலை, மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையின் வெள்ளோடு பகுதியில் இருந்து பில்லமநாயக்கன்பட்டி - பெரியகோட்டை வழியாக முள்ளிப்பாடி வரை அமைக்கப்படுகிறது.
சாலை அமைப்பு திட்டம்
பின்னர் அது தாமரைப்பாடி அருகே திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிலத்துடன் சேர்த்து, மரம், கிணறு போன்றவற்றுக்கும் தனி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனினும், சில விவசாயிகள் குறைவான இழப்பீடு கிடைத்ததாகக் கூறி போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சாலை அமையும் பகுதி பெரும்பாலும் விவசாய நிலங்களாக இருந்தது. அதனால் முன்பு அங்கு நிலத்தின் மதிப்பு குறைவாகவே இருந்தது.
நில விலை உயர்வு
ஆனால் தற்போது, சுற்றுச் சாலையின் காரணமாக அப்பகுதி நிலங்கள் விற்பனைக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. சாலையோரம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகங்கள், பெட்ரோல் பங்க், பார்க்கிங் உள்ளிட்ட வணிக முயற்சிகளுக்காக நிலம் தேடி முதலீட்டாளர்கள் வரிசையாகக் காத்திருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் நிலங்களை பிளாட் போட்டு விற்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
ரியல் எஸ்டேட்
வணிகம் மற்றும் முதலீடாக நிலம் வாங்கி வைக்க ஏராளமானோர் முயன்று வரும் நிலையில், இடைத்தரகர்களும் அங்கு குவிந்துள்ளனர். தற்போது சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கும் நிலையில், அந்தப் பணிகள் முடிந்தவுடன், அப்பகுதி நிலங்களின் மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரிங் ரோட்டால் போக்குவரத்து சிக்கலுக்கு விடை காண்பதோடு மட்டுமின்றி, திண்டுக்கல் புறநகரின் பொருளாதார வளர்ச்சியையும் வேகப்படுத்தும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications