ராமர் பாலம் ஆதாரம் இல்லைதானே... சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றுங்க.. கி.வீரமணி வலியுறுத்தல்
திண்டுக்கல்: ராமர் பாலம் இருந்தது என்பதற்கான ஆதாரங்களே இல்லை என மத்திய பாஜக அரசு அறிவித்துவிட்ட நிலையில் சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், இலங்கையின் மன்னார் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன மேடுகள் அமைந்துள்ளன. குறைந்த ஆழத்தில் இருக்கும் இந்த சுண்ணாம்பு மேடுகள் ஒரு பாலம் போல காட்சி தருகின்றன. இதனை புராண இதிகாசமான ராமாயணத்துடன் இணைத்து, கடவுள் ராமரால் சீதையை மீட்க கட்டப்பட்ட ஒரு பாலம் என நம்பப்பட்டது.

ராமர் கட்டியதுதான் இந்த பாலம் என்பதற்கான சான்றுகளும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பால விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது தமிழகத்தின் மிக நீண்டகால கோரிக்கை சேதுசமுத்திர கால்வாய் அமைக்க வேண்டும் என்பதுதான். வங்க கடலில் பயணிக்கும் கப்பல்கள் இலங்கையை சுற்றித்தான் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ராமர் பாலம் பகுதியை ஆழப்படுத்தினால் சுமார் 400 கிமீ கடல்வழி, சுமார் 30 மணிநேர பயண செலவு குறையும். இதுதான் சேது கால்வாய் திட்டம் என்பது.
ஆனால் ராமர் பாலத்தின் பெயரால் தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அடிநாதமாக திகழ்ந்திருக்க வேண்டிய சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது. இந்த சர்ச்சையின் போது ராமர் என்ற ஒரு கடவுள் இருந்தாரா? அவர் பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் மறைந்த முதுபெரும் திராவிடர் இயக்க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி. இதற்காக அவரது தலைக்கு விலை நிர்ணயித்து தலையை வெட்ட சொன்னது இந்துத்துவா கோஷ்டி. பின்னர் நீதிமன்ற தலையீடுகளால் சேது சமுத்திர கால்வாய் திட்டம் முடங்கிவிட்டது.
இந்த நிலையில் ராஜ்யசபாவில் பாஜக எம்பி கார்த்திகேய சர்மா, ராமர் பாலம் தொடர்பாக அறிவியல் ரீதியான ஆய்வு நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் பதிலளிக்கையில், ராமர் பாலம் தொடர்பாக விண்வெளி துறையினர் ஆய்வு நடத்தினர். ராமர் பாலம் என்பது சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்கிற நம்பிக்கை உள்ளது. ராமர் பாலம் எனப்படும் பகுதியை செயற்கைக்கோள் படம் பிடித்தது. இந்த செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் ராமர் பாலம்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார்.
இதனை சுட்டிக்காட்டி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ராமர் பாலமே இல்லை என மத்திய அரசு அறிவித்துவிட்டது. அதனால் இனியேனும் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடாது என்பதற்காகவே பாஜகவினர் சேது சமுத்திர திட்டத்தை முடக்கி வைத்தனர். தற்போடு மத்திய அரசு ராமர் பாலமே இல்லை என அறிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் இணைந்து சேது கால்வாய் திட்டத்தை கொண்டு வரவேண்டும். இதற்கான அனைத்து தரப்பு மக்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் கி.வீரமணி.












Click it and Unblock the Notifications