களம் இறக்கிய திமுக, அதிமுக.. வாய்ப்பிருந்தா உங்க ஊர் மேயர் இவங்க தான்.. திண்டுக்கல் பட்டியல் ரெடி..!
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் இவர்கள்தான் என ஆருடங்கள் சொல்லப்பட்டு வருவது தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு மிகக் குறுகிய இடைவெளியில் உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 47ல் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு வார்டு கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 38 வார்டுகளில் திமுக அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. 9 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சிகளை அதிமுக எதிர்கொள்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி பொருத்தவரை 48 வார்டுகள் உள்ள நிலையில், இருபத்தி ஐந்து இடங்களில் தனிப் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி கட்சிகளும் மேயர் பதவியையும் துணை மேயர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக நாற்பத்து ஏழு இடங்களிலும் திமுக முப்பத்தி மூன்று இடங்களிலும் தனிப்பெரும்பான்மை பெற முயற்சித்து போட்டியிடுகின்றன. எப்படியாவது தனிப் பெரும்பான்மை பெற்று பதவியை கைப்பற்ற வேண்டும் என இரு கட்சிகளும் தீவிரமாக முயன்று களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தீவிர பிரச்சாரம்
இதற்கு ஏற்றார் போலவே வேட்பாளர்களும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாலர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சிகள் அல்லாமல் அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தற்போது தேர்தல் களம் சுறுசுறுப்பாக உள்ளது.

திமுக மேயர் பட்டியல்
திமுகவைப் பொறுத்தவரை இவர்தான் மேயர் வேட்பாளர் என இதுவரை கட்சி சார்பாகவோ நிர்வாகிகளோ வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அமைச்சர் பெரியசாமியின் நெருங்கிய உறவினராக கருதப்படும் இந்திராணிக்கு மேயராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக மூத்த உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர். அப்படி இல்லாவிட்டால் முன்னாள் ஒன்றிய சேர்மன் பெருமாள்சாமியின் மனைவி சாந்திக்கும், அதற்கு அடுத்ததாக முன்னாள் ஒன்றிய சேர்மன் சந்திரசேகரனின் மருமகளுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக மேயர் பட்டியல்
அதிமுக வெற்றி பெற்றால் இவர்தான் மேயர் என ஏற்கனவே முன்னாள் மேயர் மருதராஜ் மகள் பொன்முத்துவை முன்னிறுத்தியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஒத்துக் கொள்ளாத நிலையில் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட பொன்முத்து தான் மேயர் வேட்பாளர் என்பது முடிவாகிவிட்டது என அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஒருவேளை பொன்முத்து வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால், முன்னாள் நகர செயலாளர் பாரதிமுருகனின் மனைவி உமாதேவி, பகுதி கழக செயலாளர் மோகனின் மனைவி சத்தியவாணி, மறைந்த முன்னாள் வார்டு உறுப்பினர் பழக்கடை நாகராஜின் மனைவி ஜெயலட்சுமி என யாராவது ஒருவர் மேயர் வேட்பாளராக வர வாய்ப்புண்டு. தற்போதைய கள நிலவரப்படி திண்டுக்கல் மாநகராட்சி யார் வசம் செல்லப்போகிறது என்பதே பெரும் கேள்வி..












Click it and Unblock the Notifications