கொடைக்கானல் மலையில் பலத்த மழை மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. மக்களுக்கு எச்சரிக்கை!
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மஞ்சளார் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மஞ்சளார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் ஒன்றாம் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த 15 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் காணப்பட்டது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து,சிறிது சிறிதாக அதிகரித்தது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 664 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் தற்பொழுது 55 அடி நீர் உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 644 கனடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 644 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது. அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் தற்போது அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் நேராக அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
மஞ்சளாறு அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே பிரதான மதகு வழியாக வெளியேற்றப்படுவதால், கெங்குவாா்பட்டி, தும்மலபட்டி, கணவாய்ப்பட்டி, புதுப்பட்டி, வத்தலக்குண்டு பாலம், ஆடுசாபட்டி, சின்னுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மேலும், மஞ்சளாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மஞ்சளார் ஆற்றின் ஆற்றங்கரையோர பகுதிகளான தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, G. கல்லுப்பட்டி, தும்மளப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆற்றை கடக்கவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முழு கொள்ளளவை எட்டிய நீலகிரி அவலாஞ்சி அணை.... உபரி நீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!