ஒரே நாளில் ஒரே இடத்திற்கு வரும் 3 ‘பெரும் தலை’கள்.. பெரிய சம்பவம் நடக்குமா? - தகிக்கும் அதிமுக!
திண்டுக்கல் : அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் சந்திக்கும் வாய்ப்பு திடீரென ஏற்பட்டுள்ளது.
Recommended Video
மூவரும் நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்து வரும் நிலையில், ஒரே இடத்திற்கு மூவரும் வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டிக்கு மூவரும் வருகை தர இருப்பதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியான மாயத்தேவர் நேற்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா மூவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று பகலில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா ஆகியோர் வர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அதிமுக முதல் பிரதிநிதி..இரட்டை இலை நாயகர் ’மாயத்தேவர்’! எம்ஜிஆர் அன்பை பெற்றது எப்படி? முழு பின்னணி!
அதிமுக மோதல்
அதிமுகவில் கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் போக்கு தீவிரமாக தலைதூக்கியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு இந்தப் பிளவை இன்னும் பெரிதாக்கியது. இரு தரப்பினரும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி, தங்களது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக பதவியில் நியமித்து வருகின்றனர். அதிமுகவில் முடிவுகளை எடுக்க யாருக்கு உரிமை இருக்கிறது என்பது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேருக்கு நேர்
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ஒரே மேடையில் இருந்தாலும் கூட இருவரும் அன்று நேருக்கு நேர் முகம்பார்த்துக் கொள்ளவில்லை. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடந்தபோது ஓபிஎஸ் அங்கு செல்லாமல் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனக்கு ஆதரவு கேட்டு சென்னை வந்தபோது கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. தனித்தனியாகவே சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
எந்த நேரத்திலும் நடக்கலாம்
இதுபுறம் என்றால், ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சந்திப்பார் என்று கடந்த ஒரு மாத காலமாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் எழுந்த மோதலுக்கு மத்தியில் சசிகலா, புரட்சிப் பயணத்தை தொடங்கிய நிலையில், ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க சசிகலாவை நாடுவார் என்று கூறப்பட்ட நிலையில், எந்நேரம் வேண்டுமானாலும் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.4
ஓபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயண திட்டம் தொடர்பாகவும் ஓபிஎஸ் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக அடுத்தடுத்து தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திடீர் மறைவு
இதற்கிடையேதான், திமுகவின் முதல் எம்.பியான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் சின்னாளப்பட்டியில் நேற்று காலமானார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத்தேர்தலில் வென்று திண்டுக்கல் எம்.பி ஆனவர் மாயத்தேவர். அவரது மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சசிகலா மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரம் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இறுதிச்சடங்கு
சின்னாளப்பட்டியில் உள்ள மாயத்தேவர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் முதல் எம்.பியான மாயத்தேவரின் உடலுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது.
ஒரே விமானத்தில்?
மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னையில் இருந்து 9.50 விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து சின்னாளபட்டிக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே விமானத்தில் சசிகலாவும் வருவார் என்றும் ஒரு தகவல் அடிபடுகிறது. இருவரும் ஒரே விமானத்தில் வரும் பட்சத்தில், இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக உற்சாகமடைகின்றனர் சசிகலா - ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
எடப்பாடியும் வருகிறார்?
பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மாவட்டத்தில் நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து நாளை காலை காரில் கிளம்பி சின்னாளபட்டிக்கு வந்து மாயத்தேவர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், மூவரும் ஒரே நேரத்தில் வருவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள்.
ஒரே நேரத்தில் வருகை?
ஓபிஎஸ் வரும் நேரத்தைப் பொறுத்தே எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கிளம்புவார் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இருவரும் சந்திப்பதைத் தவிர்த்து வரும் நிலையில், நாளை சின்னாளபட்டிக்கு இருவரும் வந்தாலும் கூட ஒரே நேரத்தில் வர மாட்டார்கள் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். மூன்று புள்ளிகளும் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு யதேச்சையாக ஏற்பட்டுள்ள நிலையில், இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.