லிப்டில் சிக்கிய 7 பேர்! திடீரென சூழ்ந்த புகை.. திண்டுக்கல் மருத்துவமனை உயிரிழப்புக்கு என்ன காரணம்
திண்டுக்கல்: இன்றிரவு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மிக மோசமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த தீ விபத்து மூன்று மாடிகளுக்குப் பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடிய பிறகே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மருத்துவமனையிலிருந்த பல நோயாளிகள் மீட்கப்பட்ட போதிலும், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே அவர்கள் எப்படி உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இன்று இரவு 9 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இரவு திடீரென ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியுள்ளது. அந்த மருத்துவமனை மொத்தம் 4 தளங்கள் இருந்த நிலையில், அதில் 3வது மாடி வரை தீ பரவியுள்ளது.
உயிரிழப்பு: தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். திண்டுக்கல் மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். இதன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்ட சில நொடிகளில் அவர்களால் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடிந்தது.
கணினியில் மின்சார கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அது தொடர்பாக உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு: சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு பக்கம் தீயை அணைக்க போராடிய நிலையில், மற்றொரு புறம் உள்ளே இருந்த நோயாளிகளையும் பாதுகாப்பாக மீட்டனர். இதில் சுமார் 50 நோயாளிகள் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவருமே அருகே உள்ள திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லிப்ட்: மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவருமே பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், நோயாளிகளைப் பார்க்க வந்த 7 பேர் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அதாவது 4 மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் லிஃப்ட்டில் அவர்கள் இருந்துள்ளனர். அப்போது தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. அவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது: இது மட்டுமின்றி நோயாளிகளைத் தீயணைப்பு வீரர்கள் முதலில் மீட்ட நிலையில், லிப்டில் சிக்கியுள்ளவர்கள் குறித்த விவரங்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் முதலில் சொல்லவில்லை எனத் தெரிகிறது. அனைத்து நோயாளிகளும் மீட்கப்பட்ட பின்னரே லிப்டில் சிலர் சிக்கியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். தாமதமாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாலேயே அவர்களைக் காக்க முடியாமல் போனதாகத் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் 3 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல மற்றொரு லிப்ட்டில் வேறு சிலர் சிக்கியதாகவும் இருப்பினும் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications