அடங்காத போலீஸ்.. அத்துமீறும் காவலர்கள்! சிவகங்கை அதிர்ச்சியே தீரவில்லை.. திண்டுக்கல்லில் நடந்த கொடூரம்!
திண்டுக்கல்: சிவகங்கை அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தேனியில் பட்டியலின இளைஞரை காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இடப்பிரச்சனையில் இளைஞரை வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமார் காவல் துறையினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம்.
மேலும் தோட்டத்தில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கிய காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்திருக்கும் நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் மறுபக்கத்தை காட்டும் வகையில் மற்றொரு அதிர்ச்சி வீடியோ வெளியானது. தேனியில் பட்டியலின இளைஞரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படுமென காவல்துறை கூறியுள்ளது. இதற்கிடையே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இடப்பிரச்சனையில் இளைஞரை வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சுள்ளெறும்பு பழையகோட்டை கிராமத்தில் அறநிலையதுறைக்கு சொந்தமான முத்தாலம்மன் கோவில் இடம் உள்ளது. அதில் மாட்டு தொழுவமாக பயன்படுத்தி வந்த இடத்தை பொன்ராஜ் என்பவர், திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்பவரின் உதவியோடு அதிகாரத்தை பயன்படுத்தி பட்டா வாங்கி தன் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த இடத்தில் பொன்ராஜ் வீடு கட்ட தொடங்கி, கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி மற்றும் குடும்பத்தினர் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை அடுத்து பொன்ராஜ் தனது வீடு கட்டும் பணியை தங்கப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் தடுப்பதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னு மற்றும் பொன்ராஜ் ஆகியோர் காவல் அதிகாரிகளிடம் தங்கப்பாண்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த தூண்டுதலின் பேரில் வேடசந்தூர் காவல் ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான காவலர்கள், தங்கப்பாண்டி வீட்டிற்கு காவல்துறை உடை அணியாமல் சென்று அவருடைய மனைவி விஜயா மற்றும் அவருடைய மகன் பிரபு என்பவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
பலத்த காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோர் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி ரவுடிகள் போன்று செயல்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications