திண்டுக்கல்லில் வேலி தாண்டும் ர.ர.க்கள்! கையை பிசையும் இரு ‘தலைகள்’! ஸ்கெட்ச் இவங்களுக்குத்தானா?
திண்டுக்கல் : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் அடுத்தடுத்து ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பு நிர்வாகிகள் சிலர் மேலும் ஓபிஎஸ் தரப்பில் ஐக்கியமாக இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக தலைமையை கைப்பற்ற போவது யார் என்ற தர்மயுத்தம் தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கப்படும் ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணசைவில் ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் தற்போது மூலைக்கு மூலை அதிகார மோதல்களால் சிதறுண்டு கிடப்பதை அதிமுக தொண்டர்கள் உண்மையிலேயே ரசிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அதிமுக மோதல்
தற்போதைய சூழலில் யாருக்கு அதிகபட்ச அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் பக்கம் சென்று தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என நிர்வாகிகள் கருதி வந்தாலும் உண்மையான தொண்டர்கள் எதிர்பார்ப்பு. அனைவரும் ஒன்றாக இணைந்து எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதுதான் என உண்மையான அதிமுக தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர். எங்கள் பக்கம் தான் தொண்டர்கள் பலம் என இரு தரப்பினரும் கூறி வந்தாலும் தற்போது தொண்டர்களை கேட்டு எதுவுமே நடக்கவில்லை நிர்வாகிகள் வைத்தது தான் சட்டம் என்ற நீதியில் நிர்வாகிகள் இருப்பதாக அதிமுகவினரே குறை சொல்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
இது ஒரு பக்கம் இருந்தாலும் அதிமுகவில் தங்கள் தரப்பு நிர்வாகிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை எப்படியாவது தங்கள் தரப்புக்கு இழுத்து விட வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன. நீதிமன்ற உத்தரவுபடி விரைவில் பொதுக்குழுவை நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதற்கு முன்னதாக குறைந்தபட்சம் ஐந்து மாவட்ட செயலாளர்கள் 500 பொதுக்குழு உறுப்பினர்களையாவது தங்கள் தரப்புக்கு கொண்டு வர வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக முயற்சித்து அதற்கான காய்களை நகர்த்தி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
தற்போதைய சூழ்நிலையில் ஓரளவு ஒன்றிய செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகமடைந்துள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களை இழுக்கும் பணி மூத்த நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்ட செயலாளர்கள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ஒன்றிய செயலாளர்களே அதிகமாக ஓபிஎஸ் தரப்புக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், சேலத்தில் ஒரு சில பகுதிகளில் ஒன்றிய செயலாளர்களும் அதிமுக நிர்வாகிகளும் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவி உள்ளனர்.

இழுக்க முயற்சி
இதனிடைய ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இணைந்துள்ள நிர்வாகிகளுக்கு 'நல்ல கவனிப்பு' அளிக்கப்பட்டதோடு மேலும் சில நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் ஓபிஎஸ் தரப்பில் இணைந்த ஒன்றிய செயலாளர்கள் தற்போது பல பகுதிகளில் இருக்கும் ஒன்றிய செயலாளர்களை தொடர்பு கொண்டு மாவட்ட செயலாளர் பதவி, மாவட்ட அளவிலான பதவி என ஆசை காட்டி தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவில் பரபரப்பு
இதற்கு ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது எனவும் வரும் நாட்களில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகிகள் விரைவில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக உலகப் புகழ் பெற்ற கோவில் இருக்கும் ஊரை சேர்ந்து ஒரு நிர்வாகியும், காய்கறிக்கு புகழ்பெற்ற ஊரில் இருக்கும் நிர்வாகிகளும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு தாவலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவின் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications