'தம்பி வா தலைமை ஏற்க வா'.. ஸ்டாலின் விஜய்யை அழைப்பது போல் போஸ்டர்.. திகைக்க வைத்த ரசிகர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் விஜய் இருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட 'தம்பி வா தலைமை ஏற்க வா' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்த வரும் ஜூன் 22ம் தேதியாகும். இவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் வித்தியாசமாக போஸ்டர்களை ஒட்டுவது வழக்கம்.
அப்படி திண்டுக்கல் மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் திமுகவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தம்பி வா தலைமை ஏற்கவா என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பது போலவும், தனது கையில் உள்ள செங்கோலை விஜய்யிடம் ஸ்டாலின் தருவது போலவும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

தவறுகளை விமர்சிப்பார்
நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது என்றாலும் எந்த கட்சியிலும் அவர் இதுவரை சேர்ந்தது இல்லை. ஆடியோ ரிலீஸ் அன்று மட்டுமே மக்கள் முன்பு தோன்றும் விஜய், நிர்வாக ரீதியாக தவறுகள் இருந்தால் விமர்சனம் செய்வார். அந்த வகையில், அதிமுக ஆட்சியை நிர்வாக ரீதியாக இரண்டு முறை விமர்சனம் செய்துள்ளார்.

சேரவில்லை விஜய்
நடிகர் விஜய்க்கும் அரசியலுக்குமான தொடர்புமான கடந்த சில வருடங்களாக அதிகம் பார்க்கப்படுகிறது. விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதன்பிறகு அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை என்று அப்போது கூறப்பட்டது. அதன்பிறகு விஜய் பாஜகவுடன் நெருக்கமாவாரா என்ற பரபரப்பு எழுந்தது. ஆனால் அவர் பாஜக உடன் சேரவில்லை.

விஜய் மறுப்பு
அதேநேரம் சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் திடீரென விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்தார். அப்போது வெளிப்படையாக அதனை எதிர்த்த விஜய், தனது தந்தைக்கு தனக்கும் அரசியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. தனது தந்தையின் அரசியல் கட்சிக்கு பின்னணியில் தான் இல்லை என்றும் மறுத்தார். அத்துடன் தன் மக்கள் இயக்கத்தினரை அதில் சேர வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். இதனால் கடைசி வரை எஸ்ஏ சந்திரசேகரின் கட்சி செயல்படாமல் முடங்கியது. கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தையும் எஸ்ஏசி முட்டைக்கட்டிவைத்தார்.

விஜய் போஸ்டர்
விஜய் தனக்கு அரசியலில் தற்போது இறங்கும் எண்ணம் இல்லை என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்றாலும், அவரது அரசியல் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுந்து வருகின்றன. சட்டசபை தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அமைதியாக கடந்தார். தற்போது தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பிறந்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் ஒட்டியள்ள போஸ்டர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட 'தம்பி வா தலைமை ஏற்க வா' என்று உள்ளது. விளையாட்டாக விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டினார்களா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications