திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி.. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்!
திண்டுக்கல் : பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கணவனை இழந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்ததால், அப்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து உடனடியாக அந்தப் பெண் அவரது உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டி, பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பா.ஜ.க நிர்வாகி மீது அப்பெண்ணின் குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

கணவரை இழந்த பெண்
திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி, பெரியாண்டவர் நகரை சேர்ந்தவர் மனிஷா (25). மனிஷா சட்டம் பயின்றவர். இவரது கணவர் குமரேசன். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். குமரேசன் கடந்த 2018ல் கொலை செய்யப்பட்டார். மனிஷா தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் வசித்து வருகிறார்.

பாஜக பிரமுகர்
திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், மனிஷாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து உதவிகள் செய்வதாக கூறிச் சென்றுள்ளார். தான் குமரேசனின் சகோதரனைப் போல எனக் கூறி மனிஷாவிடம் பேசி வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார் மனிஷா.

வற்புறுத்திய தினேஷ்
ஆனாலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக தினேஷ் குமார் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி காவல் நிலையத்தில் மனிஷாவின் குடும்பத்தினர் மீது பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி
தொடர்ந்து தினேஷ் குமார் மன உளைச்சல் அளித்து வந்ததால் மனமுடைந்த மனிஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிக் கிடந்த மனிஷாவை அவரது உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மனிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜக நிர்வாகி மீது புகார்
திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பாஜக பிரமுகர் தினேஷ்குமார் தன்னை கட்டாயப்படுத்தியதாலும் பொய் புகார் கொடுத்து மிரட்டியதாலும்தான் மனிஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என மனிஷாவின் சகோதரி சீமாதேவி தினேஷ்குமார் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications