ஹபிபீ கம் டூ துபாய்! அதெல்லாம் சும்மாங்க.. வேலைக்காக வந்த இந்திய இளைஞர்களை பாருங்க! ஷாக் வீடியோ
துபாய்: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துபாயில் வேலைக்காக ஒரு நிறுவனம் முன் இந்தியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவும், சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்தன. ஆனால் அந்நாட்டின் பொருளாதாரம் தற்போது உலகம் முழுவதும் ஆட்டிபடைத்து வருகிறது. சீன பொருட்கள் இல்லாத இடமே இல்லை என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் உலகையே தனது பிடியில் வைத்திருந்த அமெரிக்கா தற்போது தளர்ந்து போயுள்ளது. பிரிட்டன் சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு மந்த நிலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது.

இந்தியா வேலைவாய்ப்பு: இப்படி இருக்கையில்தான் இந்தியாவின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் வேலைவாய்ப்பு விஷயத்தில் இந்தியா இன்னும் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தவும் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு இதற்கான நிதியை மத்திய பாஜக அரசு கணிசமாக சுருக்கிவிட்டது. கிராமப்புறங்களை மேம்படுத்தவும், அம்மக்களுக்கான பொருளாதாரத்தை உயர்த்தவும் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் நிதியில்லாமல் தற்போது திணறி வருகிறது. மறுபுறம் நகரங்களிலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.
ஜூன் மாதத்தில் 8.45 சதவீதமாக இருந்த மொத்த வேலையின்மை விகிதம் ஜூலையில் 7.95 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப இது போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஒப்பீட்டளவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று காலத்திற்கு பின்னர் இது அசுர வளர்ச்சியை கண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வகுப்புவாதம் - வேலைவாய்ப்பு: அதேபோல நாட்டில் வகுப்புவாத வன்முறைகள் அதிகம் நடந்து வருவதை சர்வதேச நாடுகள் அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றன. இதனால் இந்தியாவை நோக்கி வரும் முதலீடுகளும் குறைந்து கொண்டே வருகின்றன. பெரு நிறுவனங்கள் இந்தியா வருவதற்கு யோசிக்கும் நிலை உள்ளது. இதனால் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில் மந்தநிலை ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் பெரிதும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது இல்லை.
குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மத கலவரங்கள் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவில் வேலை இல்லை என்று இந்தியர்கள் வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக இஸ்லாமிய நாடான அமீரகத்தின் துபாய்க்கு இந்தியர்கள் வேலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
டிரெண்டான வீடியோ: இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் துபாய்க்கு சென்று வேலை தேடும் இந்திய இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஒரு அலுவலகம் முன் இன்டர்வியூவிற்காக நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவில் பேசும் நபர்.. துபாய்க்கு வேலை தேடி வந்தால் இதுதான் கதி. இந்தியர்கள் பலர் வேலை தேடி இங்கே குவிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டு உள்ளார்.
பலரும் இந்த வீடியோவை சுட்டிக்காட்டி இந்தியாவில் நீடிக்கும் வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், மதவாத வன்முறைகள் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications