தகர்ந்த ரோகித் ஷர்மாவின் "பிம்பம்".. கோலியைவிட கோபக்காரரோ? “அது” மிஸ்ஸிங் - எப்போதும் கூல் தோனிதான்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவின் நடவடிக்கைகள் அவரை கோபக்காரராக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளன.
90கள், 2000 த்தில் பிறந்த இளம் தலைமுறையினர்களுக்கு கங்குலு, டிராவிட், தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகிய கேப்டன்களை மட்டுமே நன்கு தெரியும். அதில் ரோகித் ஷர்மா சமீபத்தில்தான் கேப்டன் பொறுப்பேற்றார்.
சவுரவ் கங்குலி மைதானத்தில் மிகவும் ஆக்கிரோஷமான கேப்டன் என்ற பெயரை பெற்றவர். ஆனால், சக வீரர்கள் மத்தியில் கோபத்தை அவர் அதிகம் காட்டியதில்லை. அடுத்து வந்த ராகுல் டிராவிட் பெரும்பாலும் அமைதியாகவே நடந்துகொள்வார்.
“அதிசயம்” நடக்கலாம்! ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு “கடைசி சான்ஸ்”! எல்லாம் ஆப்கானிஸ்தான் கையில்
கூல் கேப்டன் தோனி
ராகுல் டிராவிடுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனியை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த அளவுக்கு இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூல் கேப்டன் என்ற பெயரை பெற்றவர். எதிரணி வீரர்களும் தோனிக்கு மரியாதை கொடுக்க காரணம் அவரது நிதானமான அணுகுமுறை. நெருக்கடியான நேரத்தில்கூட இளம் வீரர்களுக்கு பக்கபலமாக இருப்பார். சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்ற பிறகு ஐபிஎல்-இல் தவறான முடிவை கொடுத்ததற்காக நடுவர் மீது அவர் கோபப்பட்டு இருக்கிறார்.
கோலியும் கோபமும்
ஆனால், தோனிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி நேரெதினாவர். மைதானத்தில் கங்குலியை விட ஆக்கிரோஷமாக நடந்துகொள்பவர். இருந்தாலும், கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் பிற்காலத்தில் அவரும் சற்று ஆக்கிரோஷத்தை கட்டுப்படுத்திக் கொண்டார். அதே நேரம் போட்டியின்போது தங்களை சீண்டி உணர்வுகளை காயப்படுத்தும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து அவர்களைவிட 10 மடங்கு அதிகம் ஸ்லெட்ஜிங் செய்ய வைத்தார்.
கோலியின் தலைமைத்துவம்
தனது அணியின் இளம் வீரர்கள், மூத்த வீரர்களை எதிரணி வீரர்கள் சீண்டினால் அவர்கள் யாராக இருந்தாலும் மைதானத்திலேயே உரிய பதிலடியை கொடுத்துவிடுவார் கோலி. ஆஸ்திரேலியாவில் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜை அந்நாட்டு ரசிகர்கள் நிறவெறியோடு விமர்சித்ததற்கு கோலி காட்டமான பதிலடியை கொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு முஹம்மது ஷமியை மதவெறியோடு விமர்சித்த இந்திய ரசிகர்களையும் அவர் கடுமையாக சாடினார். இந்த குணத்தில் அவர் தனது தலைமைப் பன்பை நிரூபித்தார்.
கோபக்கார ரோகித் ஷர்மா
தற்போது கேட்பனாக இருந்து வரும் ரோகித் ஷர்மா இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடும்போது அமைதியானவர் என்ற பெயர் பெற்றவர். ஐபிஎல்-இல் மும்பை அணி கேப்டனாக இருந்தபோது ரோகித் சர்மா அதிகம் கோபப்பட்டது இல்லை. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரோகித் சர்மா மீதான ரசிகர்களின் பார்வையை மாற்றி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய போட்டியில் கேட்ச் தவறவிட்ட இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் மீது கோபமாக கத்தியது, அதேபோட்டியில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்டிடம் ஓய்வு அறையில் கோபமாக சத்தம்போட்டது, இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் தன்னிடம் பேச வந்த அர்ஷ்தீப் சிங்கிடம் கோபப்பட்டு நகர்ந்து சென்றது போன்றவை விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
தலைமைப் பன்பு
ரோகித் ஷர்மா தொடக்க காலத்தில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால் பல முறையில் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அப்போது கேப்டனாக இருந்த தோனி ரோகிஷ் சர்மா மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தொடக்க வீரராக களமிறங்கு வாய்ப்பை கொடுத்ததால் இன்று உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக நிற்கிறார். தோனியின் இதே குணம் விராட் கோலியிடமும் உள்ளது. இளம் வீரர்கள் பலர் சொதப்பும்போது தட்டிக்கொடுத்து, ஊக்குவித்து, வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார். ஒரு நல்ல தலைவனுக்கு இருக்க வேண்டும் இந்த முக்கியமான பன்பு ரோகிஷ் சர்மாவிடம் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது.