அப்பாடா.. சிஎஸ்கே கோப்பையை வென்ற கையோடு.. தோனி சொன்ன ஹேப்பி நியூஸ்.. ரசிகர்கள் செம குஷி
துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனி அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது பேச்சின் மூலம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தோனிக்கு 40 வயதாகி விட்டதால் அவர் இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற்று விடுவார் என்பது பரவலான பேச்சாக இருந்தது. அதிலும் சிஎஸ்கே அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ள இந்த நிலையில் வெற்றியோடு அவர் விடை பெறுவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.
இந்திய அணிக்கு எப்படி ஆலோசகராக செயல்படுகிறாரோ, அதேபோல சென்னை அணிக்கும் தோனி ஆலோசகராக செயல்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறினர்.

சேப்பாக்கம்
ஆனால், தல தோனி சமீபத்தில் அளித்த பேட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் பிரிவுபசார நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்தார். அதாவது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக ஆட போவதை சூசகமாக அவர் தெரிவித்திருந்தார்.

நிலைமை மாறும்
ஆனால் அடுத்த சில தினங்களிலேயே மற்றொரு பேட்டியில், நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறும்.. இப்போது சொல்ல முடியாது என்று ஒரு பேட்டியளித்திருந்தார். இதனால் குழப்பம் நிலவியது .

சிஎஸ்கே சாம்பியன்
இந்த நிலையில்தான் நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்பிறகு தோனி ஓய்வு பெறும் முடிவை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பரிசளிப்பு விழாவில் பேசிய தோனி, நான் இன்னும் விட்டுவிடவில்லை.. என்று தெரிவித்தார்.

பிசிசிஐ கையில் உள்ளது
மேலும் அவர் பேசுகையில், ஏற்கனவே கூறியதை நான் மீண்டும் கூறுகிறேன் . பிசிசிஐ கையில்தான் எல்லாம் இருக்கிறது. அடுத்த வருடம் 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் களமிறங்குகின்றன. எனவே சென்னைக்கு எது நல்லது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். நான் அல்லது நான்கைந்து பேர் மட்டும் எடுக்கக்கூடிய முடிவு இது கிடையாது. சென்னை அணி பாதிப்படையாத அளவுக்கு ஒரு அணியை உருவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அடுத்த பத்து வருடங்களுக்கு சென்னை அணிக்கு பங்களிப்பு தரக்கூடியது யார் என்பதை பார்த்து நாங்கள் முடிவு செய்வோம். இவ்வாறு தோனி தெரிவித்தார்.

தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி
அதாவது டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது, அப்போது சென்னை அணிக்கு சில குறிப்பிட்ட வீரர்களை வாங்குவது, அதில் ஒருவரை கேப்டனாக நியமனம் செய்வது என்று திட்டம் தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகத்துக்கு இருப்பதாக தெரிகிறது. சரியான கேப்டன் கிடைத்து விட்டால் அடுத்த சீசனில் தோனி ஓய்வு பெறக் கூடும், அல்லது தோனி விளையாடக் கூடும் என்கிறார்கள் சிஎஸ்கே வட்டாரத்தில். இருப்பினும் ஓய்வு முடிவை நேற்று தோனி அறிவிக்காதது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கண்டிப்பாக அடுத்த வருடம் தோனி தலைமையில் தான் சென்னை அணி களம் இறங்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications