தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய இதுதான் காரணம்.. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் எப்போது? கே.என்.நேரு பதில்
திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரவித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
ஈரோடு: பொதுக் கூட்டங்களை நடத்துவதைவிடவும் தெருத் தெருவாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பது சிறந்தது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வருவதாகவும் கே.என்.நேரு கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தல் என்பதால், திமுக கூட்டணி வெற்றிபெற தீவிரமாக பணியாற்றி வருகிறது.

திமுக பிரச்சாரம்
அதேபோல் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உட்பட ஏராளமான கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்த ஆயத்தமாகி வருகின்றனர். இதனிடையே திமுக தரப்பில் 11 அமைச்சர்கள் களமிறக்கப்பட்டு, பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனை
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய வருவாரா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிப்.3ல் வேட்புமனு தாக்கல்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்.3ம் தேதி மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பிப்.1ம் தேதி மாலை பிளாட்டினம் மஹாலில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

முதல்வர் பிரச்சாரம் எப்போது?
தொடர்ந்து, பொதுக் கூட்டங்களை விடவும் மக்களை நேரில் சந்திப்பது சிறந்தது என்பதால் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம். திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்வார். அவர் ஈரோடு மாவட்டத்திற்கு வரும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications