இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க அதிரடி.. ஈரோடு வங்கிகளுக்கு தேர்தல் அதிகாரி கட்டுப்பாடு!
இடைதேர்தலையொட்டி ஈரோட்டில் உள்ள வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கட்டுப்பாடு விதித்துள்ளார்.
ஈரோடு : இடைத்தேர்தலின்போது அதிகமாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக புகார்கள் கிளம்புவது வழக்கம். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி ஈரோட்டில் உள்ள வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கட்டுப்பாடு விதித்துள்ளார். சந்தேகத்துக்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால் உடனே தகவல் தெரிவிக்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. கட்சிகள் தேர்தல் பணிக்குழுவை அமைத்து தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் ஒத்துழைப்பு தரவில்லை.. நிதி இல்லை.. எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு
ஆலோசனை கூட்டம்
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை கண்காணிக்கவும், அவற்றை தடுக்கவும் வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தலைமையில் வங்கியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் நோக்கத்திற்காக வேட்பாளர்கள் வங்கி கணக்குகளை தொடங்கும்போது வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்கவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பணம் நிரப்பச் செல்லும்போது
தேர்தலையொட்டி கணக்கில் வராத ரொக்கப் பணம் கைப்பற்றப்படும் என்பதால், வங்கிகளால் அவுட்சோர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கு செல்லும்போது வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள், ஆவணங்களை எடுத்துச் செல்லவும், பணியாளர்கள் அந்தந்த ஏஜென்சிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வதுடன் பணமதிப்பு விபரங்கள் அடங்கிய தொகுப்பினையும் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் தேர்தல் நடைமுறை விதிகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள்
தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ள நேரத்தில் வழக்கத்திற்கு மாறான சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக நடைபெற்றாலோ, பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்டிஜிஎஸ் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றாலோ, வேட்பாளர்கள் அல்லது அவர்களது மனைவி அல்லது அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்திற்கு அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல் போன்ற பண பரிவர்த்தனைகள் இருந்தாலோ தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலரிடம்
மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதற்கான சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலோ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க அனைத்து வங்கி அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேலான பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்போது வருமான வரித்துறை, தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.