திமுக கூட்டணிக்கு ஆதரவு ஏன்? ஜெ.,வை விளாசி கருணாநிதி, ஸ்டாலினை புகழ்ந்த கமல்.. பாயிண்ட் இதுதானாம்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். இந்த வேளையில் தனது கஷ்டத்தை பார்த்து ஜெயலலிதா சிரித்ததாக மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய கமல், அப்போது கருணாநிதி, ஸ்டாலின் தான் உதவினர் என கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் கடந்த மாதம் திடீரென்று காலமானார். இதையடுத்து வரும் 27 ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் ஆதரவு
தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியுடன் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தது. மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்யப்படும் என கமல்ஹாசன் அறிவித்தார்.

கமல்ஹாசன் பிரசாரம்
அதன்படி இன்று கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் கருங்கல்பாளையத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: சின்னம், கொடி , கட்சி ஆகியவற்றை தாண்டியது தான் தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் அது நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியாரின் பேரன்
எங்களுக்குள்ளும் உறவு இருக்கிறது. அவரும் (ஈவிகேஎஸ் இளங்கோவன்)பெரியார் பேரன், நானும் பெரியாரின் பேரன். விட்டுபோன கடமையை செய்ய வந்திருக்கின்றேன். பலமுறை யோசித்து தான் இங்கு வந்திருக்கிறோம். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என்று தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

சிரித்த ஜெ., உதவிக்கு வந்த கருணாநிதி
நான் ‛விஸ்வரூபம்' என்ற படம் எடுத்தபோது என்னை தடுமாற வைத்து பார்த்து சிரித்தார் அந்த ‛அம்மையார்'(மறைந்த முதல்வர் ஜெயலலிதா). அப்போது கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என ஸ்டாலின் கூறினார். இது ஒன்றும் தேச பிரச்சனை அல்ல நான் பார்த்து கொள்கின்றேன் என்றேன்.

இங்கு இருப்பது எனக்கு பெருமை
நம்நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதற்கு இந்தியனாக ஆதரவை கொடுக்க வேண்டியது என் கடமை. நாம் கட்சிக்காக என்பதை விட அறத்தின் சார்பாக வாக்களிக்க போகின்றோம் என நினைத்து கொள்ளுங்கள். விமர்சனங்களை பின்பு பார்த்துக்கொள்ளலாம். இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்கு பெருமை. நான் வந்தற்காக காரணத்தை என் தோழர்கள் ஏன் என கேட்கமாட்டார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications