12 நாட்கள் தங்குகிறேன்.. தெருத் தெருவாக மக்களை சந்திக்கப் போகிறேன்.. ஈரோட்டில் சீமான் அறிவிப்பு!
நாம் தமிழர் கட்சி வெற்றிபெறுவதற்காக போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தெருத் தெருவாக சென்று மக்களை சந்திப்பது தான் எங்களின் அணுகுமுறையாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல், யாருடைய வாக்கையும் பிரிக்க நாங்கள் நினைக்கவில்லை என்றும், வெல்வதற்காகவே போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிப்.27ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இதனால் அனைத்து கட்சிகள் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் வேட்பாளர்
ஏற்கனவே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதனை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

சீமான் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், வரும் 2ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் செய்யப்படும். மாற்றத்தை மக்கள் விரும்பினால், அதனை நோக்கிய பயணம் தான் எங்களுடையது. அதுவே எங்கள் தத்துவ நிலைப்பாடு. பிற கட்சிகள் பணத்தை கொட்டுவார்கள். ஆனால் நாங்கள் எங்களின் கருத்தை முன் வைப்போம். எங்களின் கொள்கைகளை முன் வைப்போம். வாக்கிற்கு கையேந்தும் நிலையில் தான் மக்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொடுப்பதால் தான், மக்களும் வாங்குகிறார்கள்.

இடைத்தேர்தல் மாயை
இடைத்தேர்தல் ஆளுங்கட்சி வெற்றிபெறும் என்பது வெறும் மாயை தான். மக்கள் மாற்றத்தை விரும்பினால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி காணாமல் போகும். மக்கள் நினைத்தால் அனைத்தையும் புரட்டிபோட முடியும். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக நாம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளோம். இந்தத் தேர்தலில் மக்களிடையே உண்மையை உரக்க சொல்வோம். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில், 34 சதவிகித வாக்காளர்கள் வாக்கு செலுத்தவில்லை. அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் பணிகள் செய்ய வேண்டி இருந்தது. அதனால் ஒருநாள் மட்டுமே ஈரோடு கிழக்கில் பணி செய்தேன்.

12 நாட்கள்
ஆனால் இம்முறை 12 நாட்களுக்கு மேல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். வடமாநிலத்தவர்கள் தமிழ் இளைஞர்களை தாக்கியதை இவர்களால் தடுக்க முடியாது. அது என்னால் மட்டுமே முடியும். எனக்கு வாக்களித்து மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். இலவசத்தால் மக்கள் மத்தியில் உழைக்கும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விட்டது. நூறு நாள் வேலை திட்டம், வேளாண்மையை விட்டு வெளியேற்றிவிட்டது. வடமாநிலத்தவர்களை வெளியேற்ற நாம் இங்கு வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

238 வாக்குச்சாவடிகள்
தொடர்ந்து, இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு, இடைத்தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு. நாங்கள் வென்றால் மாற்றம் வரும். புரட்சி வரும். யாருடைய வாக்கையும் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தத் தேர்தலுக்காக தெருத் தெருவாக சுற்றி மக்களை சந்திப்பது தான் எனது அணுகுமுறையாக இருக்கும். எங்கள் தேர்தல் பணிக்குழுவில் 60க்கும் மேற்பட்டவர்களை நியமித்துள்ளோம். 238 வாக்குச்சாவடிக்கு ஒருவர் என்ற முறையில் செயல்பட உள்ளோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications