மொத்தமா போங்க.. ஈரோட்டில் "ஃபுல் பவரை" இறக்கும் எடப்பாடி.. பெரிய பிளானாமே? மாஜிஸ் வேற வராங்களாம்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெரிய டீம் ஒன்றை களமிறக்க போவதாக அதிமுக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியலில் இருக்கிற சூடு போதாது மேலும் சூட்டை கிளப்புவதற்காக வந்துள்ளது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ்
இந்த இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக சார்பாக போட்டியிடும். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் மாநில காங்கிரசின் யுவராஜா கடந்த முறை அங்கு போட்டியிட்டு இரண்டாம் இடம் வந்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக இங்கு அதிமுகவே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி
இந்த தேர்தல் எடப்பாடிக்கு கொஞ்சம் முக்கியமான தேர்தல். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் முதல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடக்கும் இடைத்தேர்தல். அதிமுக உட்கட்சி மோதலுக்கு இடையில் நடக்கும் இடைத்தேர்தல். இதெல்லாம் போக கொங்கு மண்டலத்தில் நடக்கும் தேர்தல். இதனால் இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி டீம் இருக்கிறது. இந்த தேர்தலில் வெல்வதன் மூலம் அரசுக்கு எதிராக மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது என்ற வாதத்தை எடப்பாடி வைக்க முடியும்.

சுணக்கம்
சுணங்கி இருக்கும் அதிமுக தொண்டர்களை எழுப்பிவிட முடியும். அதோடு தேர்தலில் வென்றால் கொங்கில் மீண்டும் எடப்பாடி கொடி நாட்ட முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் நகர்புற உள்ளாட்சி ஏற்பட்ட சரிவிற்கு பதிலடியாக இது இருக்கும். 2024 லோக்சபா தேர்தலுக்கு அதிமுக தொண்டர்கள் வேலை பார்க்க இந்த தேர்தல் உத்வேகத்தை கொடுக்கும். மிக முக்கியமாக அதிமுகவிற்கு உள்ளே எடப்பாடி ஒற்றை தலைமை என்று நிலை ஏற்பட இது வழி வகுக்கும். இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் எடப்பாடி அதிமுகவை மொத்தமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வாய்ப்பு உருவாகும்.

திமுக கூட்டணி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்யும். ஆளும் தரப்பு என்பதால் முழு பவரையும் உபயோகிக்கும். இதேபோல் அதிமுகவும் பெரிய அளவில் பணத்தையும், ஆட்களையும் இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட எடப்பாடிக்கு இது வாழ்வா சாவா தேர்தல் என்பதால் எடப்பாடி இங்கே பெரிய டீமை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோவையை சேர்ந்த எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள் எல்லோரையும் தொகுதிக்குள் இறக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.

செந்தில் பாலாஜி
இங்கே செந்தில் பாலாஜி டீம் சார்பாக பணிகள் நடக்கும். இதற்கு பதிலடி தரும் விதமாக வேலுமணி, தங்கமணி மற்றும் மாஜி அமைச்சர்கள் உள்ளிட்டோர் அணியை இறக்கி எடப்பாடி பணிகளை செய்வார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக எடப்படியே நேரடியாக இறங்கியும் பணிகளை செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக இந்த தேர்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ள போவதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி தலைமையிலான அதிமுக வெட்டுக்கிளியா? வெட்டும் புலியா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது இருக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்களுக்கு நெருக்கமானவர்கள்.












Click it and Unblock the Notifications