ஈரோடு அருகே சொகுசு காரில் இருந்து ரூ.2 கோடி கொள்ளை.. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெல்லூர் நோக்கி சென்ற காரை மடக்கி ரூ.2 கோடியை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்ததுள்ளது. கார் ஓட்டுநரை தாக்கி நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்கத் சிங் என்கிற மடப்பால். இவருடைய மகள் கோவையில் தங்கி உள்ளார். பர்கத் சிங்கிடம் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த விகாஸ் ராகுல் (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.
விகாஸ் ராகுல் கோவையில் உள்ள பர்கத்சிங்கின் மகளிடம் இருந்து ரூ. 2 கோடியை வாங்கிக் கொண்டு காரில் நெல்லூருக்கு புறப்பட்டார். சொகுசு கார் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தந்து.
காரை நிறுத்திய கும்பல்
அப்போது திடீரென காரை நிறுத்திய 5 பேர் கொண்ட கும்பல் சொகுசு காரை வழிமறித்து நிறுத்தினர். தொடர்ந்து காரின் ஓட்டுநரான விகாஸ் ராகுலை அடித்து உதைத்துள்ளனர். காரில் இருந்து ஓட்டுர் விகாஸ் ராகுலை தள்ளிவிட்டதுடன் காரையும் அந்த கும்பல் எடுத்து சென்றது. உடனே அருகில் இருந்த லட்சுமி நகர் அருகே உள்ள காவல் நிலைய சோதனை சாவடிக்கு சென்று நடந்த சம்பவங்களை விகாஸ் ராகுல் கூறினார்.
உஷாரான போலீசார்
இது குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் புகாரை பெற்ற போலீசார் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்தனர். நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து சொகுசு காருடன் பணத்தை எடுத்து சென்ற கும்பலை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
காரில் சோதனை
சிறிது நேரத்தில் ஈரோட்டை அடுத்த கங்காபுரம் பகுதியில் சொகுசு கார் கேட்பாரின்றி நிற்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்தக் கார்தான் கடத்தப்பட கார் என்பதை விகாஸ் ராகுலும் உறுதி செய்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சொகுசு காரை சோதனை செய்தனர். காரில் பணம் எடுத்து செல்வதற்காக தனி அறை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
ரூ 2 கோடி பணம்
விகாஸ் ராகுலிடம் கேட்ட போது அதில் ரூ. 2 கோடி பணம் வைத்து இருந்ததாக விகாஸ் ராகுல் போலீசாரிடம் கூறினார். காரை திருடிச்சென்ற மர்ம கும்பல் அந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு காரை மட்டும் அங்கு விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது.
என்ன தான் நடந்தது?
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. கார் டிரைவர் விகாஸ் ராகுலே பணத்தை அபகரிக்க நாடகம் ஆடுகிறாரா? அல்லது உண்மையாகவே கொள்ளை நடைபெற்றதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.