அதிமுக கூட்டணியில் பாஜக? இரட்டை இலை எங்களுக்கு தான்.. களத்தில் பணியை தொடங்கிய செங்கோட்டையன்!
ஈரோடு: அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதேபோல் இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்கள் தரப்புக்கு கிடைக்கும் என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓபிஎஸ் அணி தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு இரு தரப்பிலும் நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அதிமுக ஐடி விங்கின் அடுத்த அசைன்மெண்ட்! டார்கெட் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்! ஜரூராக நடக்கும் வேலை!
பணிகளை தொடங்கிய அதிமுக
இதனிடையே அதிமுகவில் இரு அணிகள் போட்டியிடுவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பாக பணிமனைக்கான பந்தக்கால் அமைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
செங்கோட்டையன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், அதிமுகவின் வேட்பாளர் குறித்த ஆலோசனை நாளை நடக்க உள்ளது. அதன் பின்னர் விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களின் நேர்காணல் நடத்தப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படுவார்கள். எங்களை பொறுத்தவரை, இடைக்கால பொதுச்செயலாளர் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்த பின், யார் களத்தில் இருக்க போகிறார்கள் என்பது தெரிய வரும். இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை எங்களுக்கே முழுமையாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார்.
தேர்தல் களம்
தொடர்ந்து, தேர்தல் களம் எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாஜக ஆதரவு குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக பிரச்சாரம் விரைவில் தொடங்கும். வெறும் 4 கிமீ சுற்று அளவில் தான் தொகுதிக்கான நிலப்பரப்பு இருக்கிறது. அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முடிவடைந்திருக்கிறது. விரைவில் வாக்கு சேகரிக்கும் பணிகளை தொடங்குவோம் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பற்றிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மறைந்திருப்பதால், அனுதாப அலை வீசலாம். ஆனால் தேர்தல் களம் என்பது வேறு. இது அனைவருக்கும் தெரியும். இபிஎஸ்-ன் வியூகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்பீர்கள் என்று தெரிவித்தார்.