முன்னாள் அமைச்சர் நீக்கம்: வைரலான கட்சி அறிக்கை: டிஜிபியிடம் அதிமுக புகார்
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர் அன்வர்ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். நேற்று செயற்குழு நடந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை வெளியானது. இது போலி அறிக்கை என்பது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சிப் பிரச்சினை மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வெடித்த நிலையில் செயற்குழு நடப்பதற்கு முந்தின இரவு முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர் அன்வர்ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். மறுநாள் செயற்குழு கூட்டம் நடந்து அதிரடியாக சில திருத்தங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதாக ஓபிஎஸ்-இபிஎஸ் பெயரில் அறிக்கை வெளியானது.
இதை ஊடகத்தில் உள்ளவர்களும் நம்பி பகிர்ந்தனர். இந்த அறிக்கை வைரலானது. உடனடியாக கட்சி மேலிடத்திற்கு இதுகுறித்து கொண்டுச் செல்லப்பட்டது. உடனடியாக அறிக்கை போலி என்பது தெரியவந்தது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த விஷமிகள் போலி அறிக்கையை அச்சு அசலாக தயாரித்து வெளியிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் அதன் இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில் உள்ளது குறித்து கூறியிருப்பதாவது:
" நேற்று சமூக வலைத்தளங்களில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கால்நடை துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல் பட்டதன் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கட்சி கடிதத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களரின் கையொப்பமிட்ட தாக போலியான கடிதத்தை தயாரித்து யாரோ சமூகவிரோதிகள் சமூக வலைத்தளங்களில் பெருவாரியாக ஒரு போலியான, உண்மைக்கு புறம்பான செய்தியை உலவ விட்டிருக்கிறார்கள்.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமைச்சர், உடுமலை கே. ராதாகிருஷ்ணன் சார்பில் காவல்துறை தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் 153, அவதூறான செய்திகளைப் பரப்புதல் 499, போலியான ஆவணங்களை தயாரித்தல் 463, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தல் 505 போன்ற இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புதல் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டம் 66A அடிப்படையிலும் நடவடிக்கை எடுத்து உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்".