”அந்த நாடு உருப்படாது” இலங்கை நிலையை அன்றே கணித்த சூப்பர்ஸ்டார்! தீயாய் பரவும் ரஜினிகாந்த் பேச்சு..!
சென்னை : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானதோடு சொந்த நாட்டு மக்களே பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நாட்டைவிட்டு விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இலங்கை உருப்படாது என ரஜினிகாந்த் பேசியது பலித்து உள்ளதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரது பேச்சை பகிர்ந்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததையடுத்து பல இடங்களில் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவி இருந்து விலகினார்.
பற்றி எரியும் இலங்கை
அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து தீவு ஒன்றுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிபர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மல்வானை பகுதியில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னரே பேசியுள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் சங்கம் போராட்டம்
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடிகர் நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டதோடு உண்ணாவிரதம் முடியும் வரை மேடையில் அமர்ந்து அனைவரது பேச்சுக்களையும் கேட்டார். மேலும் அந்த உண்ணாவிரதத்தில் அவர் பேசிய ஆவேச பேச்சு அப்போது அனைத்து ஊடங்கங்களிலும் தலைப்புச் செய்தியாக இருந்தது.
ரஜினி எனும் தீர்க்கதரிசி
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு தற்போது பலித்துள்ளதாகவும், அவர் ஒரு தீர்க்கதரிசி என அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள், பத்திரிகை செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். சரி அப்படி அந்த கூட்டத்தில் என்னதான் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனப் பார்த்தால், பிரம்மிப்பாகத் தான் இருக்கிறது. அவர் பேசியது ஒவ்வொன்றும் இன்று உண்மையில் இலங்கையில் நடந்து வருகிறது என்பதுதான் ஆச்சர்யம்.
ஆவேச பேச்சு
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே... என பேச தொடங்கிய ரஜினிகாந்த், "நான் இங்கேயும் சரி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இலங்கைத் தமிழ்ல திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். அவர்கள் திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். பாஷை மட்டுமல்ல, பழகுவதற்கும் அவ்வளவு இனிமையானவர்கள். அந்த நல்ல மக்கள் அவங்க நாட்ல வாழ முடியாமல் மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு."
நடிகர்கள் உண்ணாவிரதம்
ரெண்டு வருஷமா அஞ்சு வருஷமா, பத்து வருஷமா... முப்பது வருஷமா உங்களால் அவர்களை ஒழிக்க முடியலன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்... ஆம்பிளைங்களா நீங்கள்? தோல்விய ஒத்துக்க முடியலேன்னு சொல்லு. ஓகே, ஒத்துக்கறதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கலியா... சரி... நீ என்னதான் செஞ்சிருக்கே... முடியல உன்னால... ஒத்துக்கணும். இன்னொன்னு புரிஞ்சுக்கணும்... இலங்கை மட்டுமல்ல... எந்த நாடாக இருந்தாலும், ஏழை மக்கள், பாமர மக்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவர்களின் வேதனை...
நாடு உருப்படாது
அந்த காற்று பட்டாலும் கூட அந்த நாடு உருப்படாது. எந்த நாடகாட்டும், சாமானிய ஜனங்க பாதிக்கப்படக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் சரி... எந்த விதத்திலயும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அந்த நாடு உருப்படாது, அவங்க சுவாசக் காற்று பட்டால் கூட அந்த நாடு உருப்படாது. உங்க நாட்ல பாமர மக்கள், பெண்கள், குழந்தைகள் பல ஆண்டுகளாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த பூமியில. அங்க இருக்கிற பாமர மக்கள் சாகிறாங்க... அவர்களது பிணங்கள் புதைக்கப்படறதா நினைக்கிறீங்களா... கிடையாது... விதைக்கப்படறாங்க.
விதைக்கப்பட்ட விதை
நீங்க யுத்தத்திதில் அந்த மக்களை எல்லாம் அழிச்சா கூட அந்த விதை உங்களை நிம்மதியா வாழ விடாது. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைச்சி வந்து உங்களை அழிக்கும் என்பதை புரிஞ்சுக்குங்க. நான், என்னுடையது என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு, இறங்கி வந்து எல்லாருக்கும் இணக்கமான ஒரு முடிவை எடுத்து, யுத்தத்தை நிறுத்துங்க. அது உங்களுக்கு நல்லது. முப்பது ஆண்டுகள் ஆன பிறகு வேணாம்னு சொன்னா அது எப்படி... செத்தவங்க வந்து வாழறவங்களை சும்மா விட்டுடுவாங்களா... முடியாது. அது எப்படி விடுவாங்க." என பேசினார். இந்த பேச்சினை தான் அவரது ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்..