மழை பெய்யாததால் விவசாயமே பண்ண முடியலை.. ‘இந்திரன்’ மீதே புகார் அளித்த உபி விவசாயி!
மழை பெய்யாதது தொடர்பாக இந்திரன் மீது புகார் அளித்து அதிர வைத்துள்ளார் உத்தரப்பிரதேச விவசாயி ஒருவர்.
லக்னோ: போதுமான மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மழைகளின் கடவுள் என குறிப்பிடப்படும் இந்திரன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உத்தரப்பிரதேசத்தில் விவசாயி ஒருவர் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'எல்லாம் அவன் செயல்..' என வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றிற்குமே கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விடுபவர்கள் ஏராளம். கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களில் சிலர் உரிமையாக கடவுளிடம் கோபப்பட்டு, சண்டைபோடும் சம்பவங்களையும் நாம் கேட்டிருப்போம்.. பார்த்தும் இருப்போம்.
ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம் வித்தியாசமானது. போதுமான மழை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, இந்துக்களின் நம்பிக்கைப்படி மழையின் கடவுளாகக் கருதப்படும் இந்திரன் மீது புகார் கொடுத்து அதிர வைத்துள்ளார் விவசாயி ஒருவர்.

புகார் மனு
உத்தரபிரதேசம் கோண்ட் மாவட்டத்தில் உள்ள ஜாலா கிராமத்தில் வசித்து வருபவர் சுமித்குமார் யாதவ் என்ற விவசாயி. அந்தப் பகுதியில் நடந்த பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் நாளில், இவரும் ஒரு புகாரை அதிகாரிகளிடம் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மழை குறைவு
காரணம் அதில், 'மழை குறைவால் அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி எழுதியுள்ள சுமித், போதுமான மழையில்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனால் பஞ்சம் வரும் நிலைமைக்கு ஆளாகியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விலங்குகள் மழை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றும் அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

இந்திரன்தான் காரணம்!
சரி மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் தான் கேட்கிறார் எனப் பார்த்தால், அதிரடியாக, 'இப்படி மழை இல்லாமல் பஞ்சம் வரக் கடவுள் இந்திரன் தான் காரணம், அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்' என வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்து அதிகாரிகளை அதிர வைத்துள்ளார் சுமித்.

ஆச்சர்யம்
கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதுவும் தனிமனிதருடைய புகார் என்பதால், அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட வருவாய்த் துறை அதிகாரிகள், அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகார் விவகாரம் இணையத்தில் பேசுபொருளான நிலையில், சம்பந்தப்பட்ட விவசாயி விளம்பரத்திற்காக இப்படிச் செய்தாரா, இல்லை நிஜமாகவே வெகுளித்தனத்தால் புகார் அளித்தாரா என நெட்டிசன்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications