வாகன சோதனையில் ஷாக்.. கார் பேனட்டில் 300 மீ தூரம்.. கதற கதற காவலரை இழுத்து சென்ற மாணவன்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது, கார் ஓட்டி வந்த பிளஸ் 2 மாணவன் பயங்கரமாக மோதினார். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் 300 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டார்.
அசுர வேகத்தில் வந்த 19 வயது மாணவன் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்க இப்படி செய்துள்ளளார். அவரை போலீஸார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.

இந்தியாவின் பெருநகரங்களில் நள்ளிரவில் முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் தடுப்புகள் அமைத்து சோதனை செய்வது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசன் எல்லையிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போலீசார் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்துவார்கள்.
இந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், பழைய குற்றவாளிகள், குற்ற வழக்கில் சிக்காமல் தப்பி ஓடியவர்கள், திருடர்கள், சந்தேகத்திற்கு உரியவர்கள், திருட்டு வாகனத்தை ஓட்டுவோர் ஆகியோர் சிக்குவார்கள். இதேபோல் வாகனங்களில் சரியான பேப்பர் இல்லாதவர்கள், கடத்தல் தொழிலில் ஈடுபடுவோர் சோதனை நடத்தும் போலீசார் மீது வன்மம் வைத்து மோதும் சம்பவங்கள் நடப்பது உண்டு. விபத்து போல் தெரிய வேண்டும் என்று நினைத்து வாகனத்தை வேகமாக இயக்கி மோதுவதும் உண்டு. அப்படி விபத்தில் இறந்த போலீசாரின் எண்ணிக்கை மிக அதிகம் ஆகும்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே கதிர்காம் என்ற காவல் நிலையத்தில் காவலராக கவுதம் ஜோஷி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் சேர்ந்து போலீசார் சிலர், சூரத்தின் அல்காபுரி பகுதியில் பாலத்தின் கீழே சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் அசுர வேகத்தில் வந்தது. இதனை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நடுவழியில் நின்று மறித்து நிறுத்த முயன்றார். ஆனால் கார் டிரைவர் காரை நிறுத்தாமல் போலீஸ்காரர் கவுதம் ஜோஷி மீது மோத முயன்றார்.. இதனால் தப்பிக்க ஜோஷி முயற்சி செய்தார்.
ஆனாலும் கார் காவலர் ஜோஷி மீது மோதி, அவரை சுமார் 300 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் சம்பந்தப்பட்ட காரை துரத்தி சென்றார்கள்.
எனினும் அந்த கார் டிரைவர் வேகமாக வாகனத்தை ஓட்டி பறந்துவிட்டார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த காவலர் கவுதம் ஜோஷியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவலர் கவுதம் ஜோஷி கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவலர் மீது மோதிய கார் டிரைவர் யார் என்று விசாரித்த போது தான் பிளஸ் 2 மாணவன் ஹேம்ராஜ் பாத்தியா என்பது தெரியவந்தது. அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்த மாணவன், போலீசார் தடுக்க முயன்றதால் தப்பிக்க மோதியது தெரியவந்தது.. அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது, கொலை முயற்சி ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications