டெல்லி “புரோக்கர்கள்”.. ரூ.100 கோடியை உதறிய எம்எல்ஏக்கள்! மேடையேற்றி பாராட்டிய சந்திர சேகர் ராவ்
ஐதராபாத்: டெல்லியை சேர்ந்த புரோக்கர்கள் ரூ.100 கோடி தர முயன்றும், கட்சியைவிட்டு விலகாமல் நம்மோடு 4 எம்.எல்.ஏக்களும் நிற்பதாக அவர்களை மேடையேற்றி பாராட்டி இருக்கிறார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.
சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது. தெலுங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்தே சந்திரசேகர் ராவ்தான் முதலமைச்சராக உள்ளார்.
பாஜக இந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் எனக்கூறினார்.

சந்திரசேகர் ராவ்
இந்த நிலையில் மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார். வரும் 2024 லோக் சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்க அவர் முயன்று வருகிறார். இதற்காக கடந்த தேசிய கட்சியையும் தொடங்கியுள்ளார்.

எம்.எல்.ஏக்களிடம் பேரம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை வாங்கி கட்சியிலிருந்து விலகிவிடுமாறு பாஜக பேரம் பேசிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான 2 ஆடியோக்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ புகார்
ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு ஆகிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 3 பேரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் பேரம் பேசிய சதீஷ் சர்மா, கே.நந்தகுமார், சிம்ஹயாஜுலு ஆகியோரை கைது செய்து 24 மணி நேரத்துக்குள் சைபராபாத் காவல் ஆணையர் முன் ஆஜர்படுத்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கே.சி.ஆர். பாராட்டு
இந்த நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர்களை மேடையில் ஏற்றிய சந்திரசேகர் ராவ், "டெல்லியை சேர்ந்த சில புரோக்கர்கள் தெலுங்கானாவின் சுயமரியாதையை வாங்க நம் தலைவர்களிடம் ரூ.100 பேரம் பேசி கட்சியில் இருந்து விலக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல், என்னுடன் வந்துவிட்டார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications