ஆக்சிஜன் இல்லை.. கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து.. 45 நிமிஷம் துடிதுடித்து.. தெலுங்கானா ஷாக்!
ஹைதராபாத்: ஒரு தாத்தா ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்.. அதனால் அவருக்கு ஆக்ஸிஜன் தடைபட்டு போனதுடன், கிட்டத்தட்ட 45 நிமிஷம் துடித்து துடித்து உயிர் பிரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா கொடுக்கும் வலியைவிட, சுற்றியிருப்பவர்களும், உறவுகளும் கொடுக்கும் வலி அதிகமாகவே உள்ளது.. தொற்று ஏற்பட்டு இறந்தால், அந்த சடலத்தை தொட்டு அழக்கூட முடியாத சூழலில் நாம் உள்ளோம் என்பது தெரிந்தும், மனித நேயம் மலிந்து வருகிறது.
தெலுங்கானாவில் ஒரு கொடூரம் நடந்துள்ளது.. இதை கேட்டாலே மனசெல்லாம் பதறி போய்விடுகிறது.. கரீம்நகர் அரசு ஆஸ்பத்திரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்கு ஒரு முதியவர் தொற்று பாதித்து அனுமதிக்கப்பட்டிருந்தார்.. ஆக்ஸிஜன் வைத்துதான் அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.. இந்நிலையில், சுயநினைவின்றி, திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.. அப்படி விழுந்ததும் அவருக்கு ஆக்ஸிஜன் வந்து கொண்டிருந்தது தடைபட்டுவிட்டது.. அதனால் கீழே விழுந்த கொஞ்ச நேரத்திலேயே ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தும் விட்டார்.
சீனாவில் கொரோனா புதிய அலை.. கொத்துக் கொத்தாக பரவுகிறது.. ஏப்ரலுக்கு பின் மிகப்பெரிய ஸ்பைக்!
இதில் கொடுமை என்னவென்றால், கட்டிலில் இருந்து இவர் கீழே விழுந்த செய்தி அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியருக்கு சொல்லப்பட்டுள்ளது.. அது தெரிந்தும் அந்த ஊழியர் அலட்சியப்படுத்தி உள்ளார்.. ஆக்ஸிஜன் கிடைக்காமல் 45 நிமிஷம் அந்த தாத்தா துடிதுடித்து உள்ளார்.. அவர் அப்படி உயிருக்கு போராடுவதை பார்த்த, அதே வார்டில் இருந்த இன்னொரு நோயாளி, அந்த ஊழியருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளார்.. அப்போதுகூட ஊழியர்கள் வர காணோம்.
இதனால் தகவல் தெரிவித்த நபர், இதை உடனே போட்டோக்களாக எடுத்து, வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தார்.. அப்போதும் யாரும் வரவில்லை.. 45 நிமிடம் துடித்தபடியே அந்த தாத்தா உயிர் பிரிந்துள்ளது.. இதற்கு முழுக்க முழுக்க ஆஸ்பத்திரி நிர்வாகம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
ஆனால், நோயாளி கீழே விழுந்து இறந்த பிறகு, ஒரு ஊழியர் ஓடிவந்து இறந்த உடலை கட்டில் மேலே ஏற்றி படுக்க வைத்து, ஆக்ஸிஜனும் வைத்ததாக சொல்கிறார்கள்.. எனினும், ஒரு நோயாளி கண்ணெதிரே இறந்துபோனதை பார்த்து அந்த வார்டில் உள்ள மற்றவர்கள் கொதிப்பிலும், கலக்கத்திலும் உள்ளனர்... இது சம்பந்தமான போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.