முதல்வர் சந்திரசேகரராவ் மகளுக்கே தூண்டில் போட்ட பாஜக.. பரபரக்கும் தெலங்கானா..நடந்தது என்ன தெரியுமா?
ஐதராபாத்: தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியின் 4 எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்தியதாக ஆடியோ, வீடியோ வெளியான நிலையில் அவரது மகள் கவிதாவை பாஜகவில் இணையும்படி சிலர் கூறிய விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக சந்திரசேகர ராவ் உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர ராவ், பாஜக இடையே கடும் மோதல் போக்கு உள்ளது.
இந்நிலையில் தான் சந்திர சேகரராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிறங்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். இதற்காக பாரத் ராஷ்ட்ர சமிதி எனும் கட்சியை அவர் துவங்கி உள்ளார்.

டிஆர்எஸ்-பாஜக மோதல்
இதற்கிடையே தான் அடுத்த ஆண்டு தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை தோற்கடிக்க பாஜக முடிவு செய்து களப்பணி ஆற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் அவ்வப்போது தெலங்கானா சென்று வருகின்றனர். இதனால் இருகட்சியினர் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ளது.

குதிரை பேர விவகாரம்
இதற்கிடையே தான் பாஜகவின் கட்சி தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி தருவதாக கூறி சிலர் சந்திரசேகர ராவின் கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியது தொடர்பான ஆடியோ வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பாக சாமியார் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோசுக்கு சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் தெலங்கானா அரசியல் விவகாரம் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சந்திரசேகர ராவ் மகள் பேட்டி
இந்நிலையில் தான் சந்திரசேகர ராவின் கட்சி அவரது மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவை பாஜகவில் இணைய வேண்டும் என சிலர் கூறிய விவகாரம் வெளியாகி உள்ளது. சந்திரசேகர ராவின் கட்சி எம்எல்ஏக்கள் தவிர முதல்வராக உள்ள அவரது மகளிடமே பாஜகவினர் இப்படி கூறியிருப்பது தெலங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவே வெளிப்படையாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

பாஜகவில் சேர கோரிக்கை
நான் ஒரு டீசன்டான அரசியல்வாதி. நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. இந்த நாட்டில் நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். பாஜகவில் இணையுமாறு அந்த கட்சியை சேர்ந்த நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். மகாராஷ்டிராவில் ‛ஷிண்டே' மாடல் என்ற வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை நான் பணிவாக மறுத்துவிட்டேன். இந்த விஷயத்தில் நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை.

செருப்பால் அடிப்பேன்
எனது தலைவர் சந்திரசேகர ராவ் தான். நாம் அனைவரும் சொந்த பலத்தில் தலைவராக உருவாகி உள்ளோம். பின்பக்கம் வழியாக நாம் நுழையவில்லை. என்னை பற்றி தவறான தகவல்களை பாஜகவினர் நிறுத்த வேண்டும். என்னை பற்றி அவதூறு பரப்பினால் செருப்பால் அடிப்பேன்'' என பகிரங்கமாக கூறினார். அதாவது கவிதா காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் பேசியதாக பாஜக எம்பி தர்மபுரி அரவிந்த் கூறிய நிலையில் கவிதா ஆக்ரோஷமாக இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications