ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்க.. ஓவைசி ட்விட்!
ஹைதராபாத்: பாபர் மசூதி வழக்கு சென்ற அதே பாதையில் தான் ஞானவாபி மசூதி வழக்கும் செல்லும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பிரபலமான காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது.
வாரணாசியில் உள்ள இந்துக் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் இங்கு மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பாபர் மசூதி அடியில் கோவில்.. கண்டறிந்த மூத்த தொல்பொருள் ஆய்வாளர் பிபி லால் மறைவு.. மோடி இரங்கல்
ஆய்வு நடத்த உத்தரவு
இந்த மசூதியின் வெளிப்புற சுவற்றில் இருக்கும் இந்துக் கடவுளான சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்துப்பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வருவதால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், மசூதிக்குள் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
இந்த ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி கோர்ட்டு உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமே மனு இவ்விவகாரம் குறித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது.
விசாரணைக்கு உகந்தது அல்ல
இதையடுத்து, ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மசூதியின் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், வழிபாடு நடத்த கோரிய இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்த மனுவின் மீது விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஓவைசி கருத்து
இந்த நிலையில், வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஹைதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, பாபர் மசூதி வழக்கு சென்ற அதே பாதையில் தான் இந்த வழக்கும் செல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''இந்த வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இதில் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தேன். வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மேல்முறையீடு செய்யும் என்றும் நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.