மகன் வளர்ந்துட்டான்.. இனி மகளுடன் தான் அரசியல்.. ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி பதவியை உதறிய தாய்!
ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அவரது தாய் விஜயம்மா கட்சியின் கூட்ட மேடையிலேயே அறிவித்தார். மேலும், அவர் தனது மகளான ஒய்எஸ் ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியில் செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக செயல்பட்டு வருகிறார். இவர் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் பெயர் விஜயலட்சுமி. இவர் விஜயம்மா என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் கவுரவ தலைவராக உள்ளார்.

கவுரவ தலைவர் பதவியில் தாய் விலகல்
இந்நிலையில் மறைந்த ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளையொட்டி இன்று ஆந்திர மாநிலம் குண்டூரில் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஜெகன் மோகன் ரெட்டியின் தாயுமான விஜயம்மா பேசினார். அப்போது அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியின் கவுரவ தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மேடையில் திடீரென்று அறிவித்தார்.

மகளுடன் கைகோர்க்க முடிவு
இதுபற்றி அவர் பேசுகையில், ‛‛நான் எனது மகள் ஷர்மிளாவுடன் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளேன். தெலங்கானாவில் ராஜன்னா ராஜ்யத்தை நிறுவ அவர் தனியாக போராடுகிறார். தெலங்கானா மக்களுக்கான ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் கனவுகளை நனவாக்க என் மகளுடன் அரசியல் செய்ய உள்ளேன். நான் எனது மகளுடன் அரசியல் செய்ய போவதாக பல யூகங்கள் வந்தன. இதுதொடர்பாக சர்ச்சைகள் உருவாகின. இதனால் தற்போது அந்த முடிவை எடுத்துள்ளேன். இதன்மூலம் கருத்து மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

மகளுடன் நிற்கவில்லையே என குற்ற உணர்ச்சி
ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என நான் நம்புகிறேன். எனது மகனின் கடினமான காலங்களில் நான் அவனுடன் இருந்தேன். இப்போது அவனுக்கு நல்லகாலம் உள்ளது. மேலும் நான் என் மகளுடன் நிற்கவில்லையே என குற்ற உணர்ச்சி தோன்றுகிறது. இதனால் எனது கவுரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது மகனுக்கு தாயாகவும், ஆந்திர மக்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்.

வெவ்வேறு நிலைப்பாடு
ஆந்திரா, தெலங்கானா, இடையே நீர்பங்கீட்டு பிரச்சனை உள்ளது. இதனால் இருமாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெவ்வறு நிலைப்பாடுகளை கொண்டுள்ள கட்சியில் நான் அங்கம் வகிக்க முடியாது. இதனால் இத்தகைய முடிவை எடுத்துள்ளேன்'' என உருக்கமாக கூறினார்.

தெலங்கானாவில் சகோதரி
இதன்மூலம் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் விஜயம்மா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மகளான ஒய் எஸ் ஷர்மிளாவின் ஒய் எஸ் ஆர் தெலங்கானா கட்சியுடன் சேர்ந்து செயல்பட உள்ளது உறுதியாகி உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி பெயர் தான் ஒய் எஸ் ஷர்மிளா. ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நேரத்தில் ஷர்மிளா தீவிர பிரசாரம் செய்தார். தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். 2014ல் ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க ஷர்மிளா திட்டமிட்டார். இதில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நாட்டமில்லை.

தொடர்பு இல்லை என்ற ஜெகன் மோகன் ரெட்டி
இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து விலகிய ஒய் எஸ் ஷர்மிளா புதிய கட்சியை கடந்த ஆண்டு தோற்றுவித்தார். ஒய் எஸ் ஆர் தெலங்கானா என்ற பெயரில் அவர் துவங்கி தெலங்கானா மாநில அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தனது சகோதரரின் ஒய் எஸ் ஆர் தெலங்கானா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தான் விஜயம்மா மகள் ஒய் எஸ் ஷர்மிளாவுடன் சேர்ந்து செயல்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications