சாட்டை எடுத்து அடிக்கும்போதும் பச்சை குழந்தை சிரிப்ப பாரு.. 'போதராஜு’ கதை கேட்டு சிலிர்த்த ராகுல்!
ஹைதராபாத் : பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தெலுங்கானாவில் மக்கள் கொண்டாடிய பொனாலு திருவிழாவில் பங்கேற்று, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைபயணம் தமிழ்நாட்டில் தொடங்கி, கேரளா, கர்நாடகா, ஆந்திராவைக் கடந்து தற்போது தெலுங்கானாவில் தொடர்ந்து வருகிறது.
இன்று 57வது நாள் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, பழங்குடியினரின் திருவிழாவில் பங்கேற்று தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார்.

ராகுல் நடைபயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தொலைவுக்கு பாதயாத்திரை நடத்துகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தனது யாத்திரையை தமிழ்நாட்டின் குமரி முனையில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என அவரது பாதயாத்திரை தொடர்ந்து வருகிறது. இதில் அவ்வப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலங்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

தெலுங்கானாவில்
தற்போது ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தி ஹைதராபாத்தில் நேற்று தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று தனது ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.

பழங்குடியிvனர் பண்டிகை
இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சங்கராரெட்டி மாவட்டத்தின் ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57-வது நாளாக நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ராகுல் நடைபயணம் சென்ற வழித்தடத்தில், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரிய பண்டிகையான பொனாலு பண்டிகையை கொண்டாடினர்.

போதராஜு
பொனாலு பண்டிகை கொண்டாடிய பழங்குடி மக்களுடன் இணைந்து அவர்களது பாரம்பரிய நடனமான 'திம்சா' நடனத்தை ஆடி மகிழ்ந்தார் ராகுல் காந்தி. மேலும் இந்த பொனாலு பண்டிகையில் 'போதராஜு' என்ற சடங்கையும் பழங்குடி மக்கள் செய்வது வழக்கம். மக்கள் வணங்கும் பெண் கடவுள் மகான்காளியின் சகோதரரான போதராஜூ, கடவுளைக் காக்க சாட்டை வீசுவதாக புராண கதை உண்டு. அதன்படி, தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக்கொண்டு பழங்குடியின மக்கள் ஆடுவார்கள்.

அடித்துக்கொண்ட ராகுல்
அந்த 'போதராஜூ' நிகழ்வைப் பார்த்து, அதுபற்றி கேட்டுத் தெரிந்துகொண்ட ராகுல் காந்தி, தானும் அதில் பங்கேற்று சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டபோது, காங்கிரஸ் தொண்டர்களும், கூடியிருந்த பொதுமக்களும் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications