தெலுங்கானாவில் தனித்துவிடப்பட்ட பாஜக.. தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் ரிலீஸ்
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் வாக்குறுதிகளையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிட பாஜக தயாராகி வருகிறது.
இம்மாத இறுதிக்குள், தெலுங்கானாவில் பாஜக தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"எங்கள் தேர்தல் வாக்குறுதி (manifesto) தயாராகிக் கொண்டு உள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அதை வெளியிட உள்ளோம்" என்று, தெலுங்கானா பாஜக செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
[நடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்!]
ரெடியாகிறது பாஜக
119 தொகுதிகளை கொண்டது தெலுங்கானா சட்டசபை. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை 21ம் தேதிக்குள் அதாவது இன்னும் 3 நாட்களுக்குள் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை, அடுத்த ஒரு வாரத்திற்குள் வெளியிட உள்ளதாம். இந்த தேர்தலில் பாஜக தனித்து களம் காண உள்ளது நினைவிருக்கலாம்.
பாஜக தனித்துவிடப்பட்டது
2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியோடு, தெலுங்கானாவில் 5 தொகுதிகளை பாஜக வென்றது. தெலுங்கு தேசம் 15 தொகுதிகளை கைப்பற்றியது. இம்முறை, தெலுங்கு தேசம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கானா ஜன சமித்தி ஆகியவை கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன என்பதால் பாஜக தனித்துவிடப்பட்டுள்ளது.
முந்திய சந்திரசேகர ராவ்
தேர்தல் வாக்குறுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதில், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி, பிற கட்சிகளை முந்திவிட்டது. சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே, 105 வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சி தலைவரும், காபந்து முதல்வருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டார். செவ்வாய்க்கிழமை தனது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
காங்கிரசும் ரெடி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா பொறுப்பாளர், ஆர்.சி.குன்டியா, கூறுகையில், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி பட்டியல் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மேலிட தலைமை ஒப்புதலை பெற்ற பிறகு, தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வரும் லோக்சபா தேர்தலிலும், இப்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றார் அவர்.
குடும்ப அரசியல்
மேலும் குன்டியா கூறுகையில், சந்திரசேகர ராவ், தொழிலதிபர் போல செயல்பட்டுக்கொண்டுள்ளார். கே.டி.ராமா ராவ், மகள் கவிதா, மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். இதில் எந்த ஜனநாயக நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். ராமா ராவ் மற்றும் ஹரிஷ் ராவ் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். கவிதா, நிஜாமாபாத் லோக்சபா தொகுதி எம்.பியாகும்.