ரூ.31,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி! மோடி செய்யாததை நாங்க செய்றோம்.. ரேவந்த் ரெட்டி பெருமிதம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றவுடன், தேர்தலின்போது கொடுத்திருந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கினார். குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து சேவை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், இதனை தொடர்ந்து மற்றொரு தேர்தல் வாக்குறுதியான விவசாயிகளின் கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

ரூ.2 லட்சம் வரை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதற்காக ரூ.31,000 கோடி செலவாகும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரேவந்த் ரெட்டி, "பாரத ராஷ்டிர சமிதியின் முந்தைய அரசாங்கம் நான்கு தவணைகளில் ரூ.1 லட்சம் வரையிலான கடனைத் தள்ளுபடி செய்ததைப் போலன்றி, ஒரே நேரத்தில் ரூ.2 கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முந்தைய அரசு 2014 தொடங்கி 2023 வரை ரூ.28,000 கோடி வரையிலான கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், நாங்கள் ரூ.31,000 கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்கிறோம்.
கடந்த 2022ம் ஆண்டு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே வேளாண் தொழில் இனி நஷ்டத்தில் இயங்காது என்கிற செய்தியை நாங்கள் இதன் மூலம் சொல்ல விரும்புகிறோம்.
விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றாமல் இருக்கும் நிலையில், வெறும் 8 மாதங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். அதேபோல விவசாய பண்டு திட்டத்தின் கீழ் ஆண்டு ரூ.10,000 வழங்கப்பட்டு வந்திருந்தது. இது இனி வரும் காலங்களில் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெலுங்கானா காங்கிரஸ் அரசு கூறியிருக்கிறது.
காங்கிரஸ் அரசின் இந்த கடன் தள்ளுபடி திட்டம் தெலுங்கானா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஜூலை 15ம் தேதி தெலுங்கானா சட்டப்பேரவையில் விரிவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications